மறக்க முடியுமா? - ஆய்த எழுத்து

வெளியான ஆண்டு : 2004
நடிகர்கள் : சூர்யா, மாதவன், சித்தார்த், பாரதிராஜா
இயக்கம் : மணிரத்னம்
தயாரிப்பு : மெட்ராஸ் டாக்கீஸ்
தமிழில் வெளியான முதல், "ஹைப்பர் லிங்க்" படம், ஆய்த எழுத்து எனலாம். நிகழ்கால தேர்தல் அரசியலைக் கண்டு மாணவர்கள் ஒதுங்கிவிடக் கூடாது. அதில் பங்கேற்று, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான், இப்படத்தின் கரு.
ஐதராபாதில், ஜார்ஜ் என்ற மாணவருக்கு, "ஸ்காலர்ஷிப்" கிடைத்தும், "கேம்பிரிட்ஜ்" பல்கலைக்கு செல்லாமல், நம் நாட்டின் அரசியலை சுத்தப்படுத்த முயன்றார்; அவர், கொல்லப்பட்டார். இந்த உண்மை சம்பவத்தை ஆதாரமாக வைத்து தான், ஆய்த எழுத்து உருவானது. சூர்யா, சித்தார்த், மாதவன் ஆகியோர் வெவ்வேறு வாழ்க்கைத் தளங்கள், பிரச்னைகள், வெவ்வேறு இலக்குகள் உடைய மூன்று இளைஞர்கள். அவர்களை, அரசியல் ஒன்றிணைக்கிறது. படத்தின் முதல் காட்சியிலேயே, ரசிகர்களை கதைக்குள் இழுத்துவிடுவார், மணிரத்னம்.
சூர்யாவை விட, மொட்டைத் தலையுடன் அடியாளாக வரும் மாதவனுக்கு தான் ஏக வரவேற்பு கிடைத்தது. அதேபோல ஈஷா தியோல், த்ரிஷா ஆகியோரைவிட, மீரா ஜாஸ்மின் கவனம் பெற்றார். வில்லனாக, இயக்குனர் பாரதிராஜா. அரசியல்வாதி கதாபாத்திரத்திற்கு, அவரது குரல் பொருந்தியது. இப்படம் ஒரே நேரத்தில் ஹிந்தியில், யுவா என்ற பெயரில், வேறு நடிகர்களுடன் எடுக்கப்பட்டது.
சுஜாதா வசனம், ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை என, திறமையாளர்கள் இப்படத்தில் இணைந்தனர். கதை சொல்லும் யுக்தி, திரைக்கதை கட்டமைப்பு, கதாபாத்திரங்களின் உருவாக்கம் அனைத்தும் சிறப்பாக இருந்தது என்றாலும், "ஏ கிளாஸ்" மக்கள் மட்டுமே, புரிந்துக் கொள்ளும் வகையில் இப்படம் இருந்ததால், வெற்றி பெறவில்லை.
"அரசியல் பழகணும் இளைஞர்களே" என்றது ஆய்த எழுத்து!





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.