Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

துலாம்உதவும் மனப்பான்மை கொண்ட துலாம் ராசி அன்பர்களே!

குருபகவான் உங்கள் ராசியில் இருந்து அக். 4ல் 2-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான அம்சம். இதுவரை குருவால் ஏற்பட்ட துன்பம் அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். தற்போது சனிபகவான் 3-ம் இடத்தில் இருக்கிறார். இது உன்னதமான நிலை.  முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும். ராகு தற்போது 10-ம் இடமான கடகத்தில் இருப்பது சிறப்பு இல்லை என்றாலும்  அவர் 2019 பிப்.13ல் 9-ம் இடமான மிதுனத்திற்கு மாறிய பின் ஓரளவு நன்மை எதிர்பார்க்கலாம். கேது தற்போது 4-ம் இடமான மகரத்தில்  இருக்கிறார். இதனால் உடல்நிலை பாதிப்பு வரலாம். அவர் 2019 பிப்.13ல் 3-ம் இடமான தனுசு ராசிக்கு மாறுவது நன்மையளிக்கும். அங்கு அவர் சனிபகவானோடு இணைந்து நற்பலன் தருவார்.  இறையருளும், பணபலமும் பெருகும்.  உடல் உபாதை மறையும்.

இனி பொதுவான பலனைக் காணலாம். எடுத்த செயலை வெற்றிகரமாக  முடிப்பீர்கள்.  எதிரியைக் கூட பேச்சால் வெல்லும் திறமை பெறுவீர்கள். பொருளாதார நிலை சீராகும். சமுகத்தில் மதிப்பு, மரியாதை ஓரளவே கிடைக்கும். விடாமுயற்சியால் சிலர் வீடு, மனை வாங்க வாய்ப்பு கிடைக்கும். இதற்காக கடன் வாங்கும் சூழ்நிலை வரும். வாகனப் பராமரிப்பு செலவு நாளுக்குநாள் அதிகரிக்கும். 8ம் இடத்தை குரு பார்ப்பதால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர் வருகையால்  நன்மை கிடைக்கும். தடைபட்ட குலதெய்வ வழிபாடு நடந்தேறும். ஆன்மிகச் சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு.  

பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர்.  வேலைப்பளு அதிகரிக்கும். பணிமாற்றம், இடமாற்றம் பெறுவதை தவிர்க்கவும். வேறு வேலைக்கு முயற்சி செய்வதும் கூடாது. சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். 2019 மார்ச் 13க்கு பிறகு முக்கிய பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். இருப்பினும் குருவின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக  உள்ளதால்  பிரச்னையை முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம்.

தொழில், வியாபாரத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபடுவீர்கள். அதிக உழைப்பு, ஆனால் மிதமான ஆதாயம் என்ற நிலை தொடரும்.விரிவாக்க நோக்கத்தில் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம். பணவிஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் நெருக்கமானவர்களிடம்  கருத்து வேறுபாடு உருவாகலாம். சில நேரத்தில் உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் நீதி கிடைக்காது. கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சக கலைஞர்கள் ஆதரவுடன் செயல்படுவர். அரசிடம்  இருந்து பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும். சிலர் தொழில் விஷயமாக வெளிநாடு செல்வர்.

அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சுமாரான நிலையில் இருப்பர். கேதுவால் சிலருக்கு தீயவர் சேர்க்கையால் பணஇழப்பு ஏற்படலாம். 2019 மார்ச்13க்கு பிறகு ஓரளவு நன்மை கிடைக்கும். மாணவர்கள் ஆர்வமுடன் படித்து கல்வி வளர்ச்சி காண்பர். கடந்த ஆண்டைவிட கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்.  குரு சாதகமாக காணப்படுவதால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆனால் 2019 மார்ச் 13க்கு பிறகு சிரத்தையுடன் படிப்பது நல்லது. விவசாயிகளுக்கு நல்ல வளர்ச்சி காத்திருக்கிறது.  மஞ்சள்,நெல், சோளம், கேழ்வரகு, கொள்ளு போன்ற பயிர்கள் மூலம்  நல்ல வருமானம் கிடைக்கும். நிலத்தின் வகையில் இருந்த பிரச்னைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கிடைக்கும். கடன் தொல்லை மறையும். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு.

பெண்கள்  கணவர் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நன்மதிப்பு பெறுவர். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பர். வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றுவது அவசியம். பிறந்த வீட்டார் ஆதரவு ஓரளவே இருக்கும். பிள்ளைகளின் வளர்ச்சியால் பெருமை கொள்வீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் பணம், நகை இரவல் கொடுப்பதை தவிர்க்கவும். பணிபுரியும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் வருமானம் கூடும். சிலருக்கு பணிமாற்றத்தால் சிரமத்திற்கு ஆளாகலாம். உடல்நிலை சீராகும்.

பரிகாரம்:
●  சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் வழிபாடு
●  வெள்ளியன்று மகாலட்சுமிக்கு நெய்தீபம்
●  சனிப்பிரதோஷத்தன்று சிவாலய தரிசனம்


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us