Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

துலாம்நல்ல மனம், உயர்ந்த குணம் படைத்த துலாம் ராசி அன்பர்களே!  

குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான கடகத்தில் இருந்து, பிரச்னைகளை தந்து கொண்டிருந்தார். அவரால் பொருள் இழப்பும், பண நெருக்கடியும் உருவாகியிருக்கும். சிலர் பதவி இழக்கும் நிலைக்கும் ஆளாகி இருக்கலாம். இந்த நிலையில் இப்போது குரு பகவான் 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வரப் போகிறார். இது சிறப்பான இடம் என்பதால் அவரால் வாழ்வின் எல்லா நிலையிலும் வெற்றிஉண்டாகும். தொழிலில் அமோக லாபத்தை வாரி வழங்குவார். அதன் பின் டிசம்பர் 20ல் குரு சிம்மத்தில் இருந்து 12-ம் இடமான கன்னி ராசிக்கு செல்கிறார். இது சிறப்பானதல்ல. பொருள் விரயத்தை உருவாக்கலாம்.  சனிபகவான் ஜூன் 12ல் வக்ரம் அடைந்து உங்கள் ராசிக்கு மீண்டும் மாறுகிறார். அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார்.

பொதுவாக சனிபகவானால் நன்மை தர இயலாது. அவரால் உடல் உபாதை ஏற்படலாம். வெளியூரில் வசிக்க நேரிடும். ஆனால் வக்ரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவான் வக்ரத்தில் சிக்கும் போது கெடுபலன் தர மாட்டார்.   மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.  குருபகவான் மட்டுமின்றி கேதுவின் பலத்தால் பொருளாதார வளம் அதிகரிக்கும். குடும்பத்தேவை அனைத்தும் நல்லமுறையில் நிறைவேறும். வருமானம் உயர்வதால் சேமிக்கவும் வாய்ப்புண்டு. உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வீர்கள். புதிய இடம், வீடுமனை வாங்கும் யோகமுண்டாகும். 

குடும்பத்தில் இதற்கு முன்பிருந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. வீட்டில் நிலவிய குழப்பம் அனைத்தும் மறையும். கேதுவால் வாழ்க்கை வசதி பெருகும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு மறைந்து, மீண்டும் ஒன்று சேருவர். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். அதுவும் நல்ல வரனாக அமையும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வரலாம். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் குதூகல பலனைக் காணலாம். லாபம் நாளுக்குநாள் அதிகரிக்கும்.
வங்கியில் சேமிப்பும் கூடும். புதிய தொழில் தொடங்க ஏற்ற காலகட்டம். ஆனால், ஏழரை சனி காலம் என்பதால் அதிக முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். எதிரிகளின் தொல்லை உங்களிடம் எடுபடாமல் போகும். அரசிடம் எதிர்பார்த்த உதவி நல்ல முறையில் கிடைக்கும். இரும்பு தொடர்பான வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

பணியாளர்களுக்கு இதுவரை இருந்த சிரமம் அனைத்தும் மறையும். வேலைப்பளு நீங்கி மனநிம்மதி காண்பீர்கள். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கை எளிதில் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க யோகமுண்டு. வேலையை விட்டு விலகியவர் கூட,அதே வேலையை மீண்டும் கிடைக்கப் பெறுவர். படித்து முடித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.  

கலைஞர்கள் இதுவரை திறமைக்கு ஏற்ற மதிப்போ, பாராட்டோ கிடைக்காமல் இருந்திருக்கலாம். இனி, இந்த பின்தங்கிய நிலை மாறும். வருமானம் உயரும். ரசிகர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் மளமளவென கிடைக்கும். அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர். தலைமையின் ஆதரவுடன் எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.  

மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சிறப்பாக அமையும். நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். தேர்வில் சாதனை புரிவர். விரும்பிய நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க யோகமுண்டாகும். விவசாயத்தில் மகசூல் அதிகரிக்கும். நெல், கோதுமை சோளம், மொச்சை, கரும்பு, எள், பனைத் தொழிலில் நல்ல வளர்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். வழக்கு விவகார முடிவு சாதகமாக அமையும். கைவிட்டு போன சொத்து மீண்டும் வர வாய்ப்புண்டு.

பெண்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். மனம் போல ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வர்.
கணவரிடம் இணக்கம் உருவாகும். குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். உறவினர் வகையில் இருந்த பிரச்னை மறையும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்:
சனி, ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பிரதோஷத்தன்று நந்தீஸ்வரரை வழிபடுங்கள். காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் சென்று வாருங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு செல்லுங்கள். ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us