ADDED : ஜூலை 14, 2024 11:57 AM

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா அலுவலக கட்டட ஜன்னலையே தோட்டமாக மாற்றி இருக்கிறார் துணை தாசில்தார் உமாமகேஸ்வரி.
அரசு அலுவலகம் என்றாலே காகித குப்பை சூழ்ந்திருக்கும், எங்கும் பைல்கள் துாங்கி கொண்டிருக்கும் என்ற நிலையை மாற்றி இயற்கை எழில் நிறைந்த இடமாக மாற்ற முயற்சித்து வருகிறார்
மதுரையைச் சேர்ந்த இவர், திருப்புவனத்தில் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக பணிபுரிகிறார். நுாற்றுக்கும் மேற்பட்ட பழைய தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் பாட்டில் ஆகியவற்றில் மணல், உரம் நிரப்பி அதில் கற்றாழை, துாதுவளை, காகித ரோஜா, துளசி உள்ளிட்ட பல்வேறு வகை செடிகளை அலுவலக ஜன்னல்களில் வளர்த்து வருகிறார்.
இந்த செடிகளை பராமரிப்பதற்காக தினமும் முன்னதாகவே அலுவலகம் வந்து விடுகிறார். காலை, மாலை என இருவேளையும் வேலை நேரம் போக மீதி நேரத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருவதால் இரு மாதங்களில் செடிகள் நன்கு அடர்த்தியாக வளர்ந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அலுவலகம் அமைந்திருப்பதால் அலுவலகத்தில் முன்பு துாசி படிந்திருந்தது. 'தற்போது ஜன்னலில் செடிகள் இருப்பதால் துாசி உள்ளே குறைவாக வருகிறது' என்கிறார் உமாமகேஸ்வரி.
அவர் கூறுகையில், 'இயற்கை நமக்கு மிகப்பெரிய கொடையை வழங்கியுள்ளது. நாம் பிளாஸ்டிக் பாட்டில், பேப்பர்களை மண்ணில் கொட்டி அதனை கஷ்டப்படுத்தி வருகிறோம். இயற்கையை பராமரித்து, வரும் தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அதற்கு என்னாலான சிறு முயற்சி இது. மதுரையில் எனது வீட்டிலும் இதுபோன்று தோட்டங்கள் அமைத்துள்ளேன். தாலுகா அலுவலகத்தில் மற்ற அலுவலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளதால் அனைத்து ஜன்னல்களிலும் தோட்டம் அமைக்க முயற்சி எடுத்து வருகிறேன்,' என்றார்.
இவரை வாழ்த்த 97912 87934