
• ஆடைத்துறையில் நுழைந்தது குறித்து...
சிறுவயது முதலே ஆடைகள் மீது மோகம் இருந்தது. எனக்கான ஆடைகளை நானே தேர்வு செய்வேன். பத்தாம் வகுப்பு படிக்கும் போது மெஷின் வாங்கி தையல் கத்துக்கிட்டேன். எனக்கான ஆடைகள், பள்ளிச் சீருடைகளை நானே தைத்துக் கொள்வேன்.
• சொந்த தொழில் செய்யும் முடிவு குறித்து...
ஆடை வடிவமைப்புக்கான அறிவு, நுணுக்கம், அனுபவம் என்னிடம் நிறையவே இருந்தன. கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஒரு கம்பெனியில் வேலையும் பெற்றேன். எனினும் சுதந்திரமாக எனது திறமைகளை வெளிப்படுத்த சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்து கிடைத்த வேலையை நிராகரித்துவிட்டேன். எனக்கான செலவுகளை நானே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு சம்பாதித்தால் போதும் என ஒரு தொழில் செய்ய முடிவு செய்து 'உழமகள்' என்ற பிராண்டில் சிறியதாக தொழில் ஆரம்பித்தேன். உழமகளின் முதுகெலும்பே என் அக்கா தான். அன்று அவர் தான் ரூ.5000 கொடுத்து தொழில் தொடங்க உதவினார்.
* 'உழமகள்' பெயர் காரணம்...
நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவள். அக்கம்பக்கத்தினர், உறவினர் எல்லோரும் அம்மாவிடம், 'உங்களுக்கு இரண்டு பொண்ணுகளா... பையனா இருந்தா பிஸினஸ் பண்ணிருப்பாங்க... நீங்க இருவரும் படிக்கல... உங்க பொண்ணுங்க மட்டும் படிக்கவா போகுதுங்க... எதுக்கு இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்கிறீங்க...' என்றெல்லாம் பேசி அவரை கஷ்டப்படுத்தி இருக்கின்றனர். அதனால் தான் நான் தொழில் தொடங்க அம்மா முழு ஆதரவு அளித்தார். அப்பாவும் அப்படியே ஆதரவு தந்தார். என்னுடைய விவசாய பின்புலம் தெரிய வேண்டும் என்பதற்காகவே 'உழமகள்' என பெயர் வைத்தேன்.
• ஆரம்ப காலங்களில் நீங்கள் சந்தித்த சவால்கள்...
முதலில் ஒரு வாரம் எந்த ஆர்டரும் வரவில்லை. பிறகு அக்காவின் தோழி ஒருவர் முதன்முதலில் ஆர்டர் கொடுத்தார். பின் ஒவ்வொரு ஆர்டராக வர ஆரம்பித்தது. கிராமத்தில் தொழில் தொடங்கியதால் டெய்லர்கள் கிடைத்தாலும் நான் விரும்பிய டிசைன்களை புரிந்துகொண்டு அதன்படி தைத்துக் கொடுக்க அவர்களால் இயலவில்லை. அவர்களுக்கு முதலில் அதற்கான பயிற்சியளித்தது, சரியான நேரத்திற்குள் ஆர்டர்களை டெலிவரி செய்வது போன்றவை சவாலாக இருந்தன.
• நீங்கள் புதிதாக ஆரம்பித்த உழமகள் பார்ம்ஸ் குறித்து...
இன்று ஒரு விவசாயி விவசாயத்தை மட்டும் நம்பி வாழ முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஐ.டி., வேலை பார்ப்பவர்கள் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டினாலும் ஒரு விவசாயியோட வாரிசுகள் விவசாயம் செய்ய தயாராக இல்லை. காரணம் விவசாயம் செய்வதில் அவ்வளவு கஷ்டம் உள்ளது. நுாறு நாள் வேலை திட்டத்தால் விவசாய கூலி வேலை செய்ய ஆள் கிடைப்பதில்லை.
• எதிர்கால திட்டம் குறித்து...
தற்போது வரை வலைதளம் மூலம் மட்டுமே விற்பனை செய்து வருகிறோம். அமெரிக்கா, தான் சானியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறோம். அடுத்து நகரங்களில் 'உழமகள்' கடை ஆரம்பிக்க வேண்டும்.
• உங்களை போன்று தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு உங்கள் அறிவுரை....
மற்றவர்கள் சொல்வதற்காகவோ, அவர்கள் செய்வதற்காகவோ நாம் ஒன்றைச் செய்தால் மாட்டிக்குவோம். ஒரு விஷயத்தில் ஆர்வம் இருக்குமேயானால் அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். நாம் விரும்பும் ஒன்றை விரும்பிய படி கொண்டுவர அதைப் பற்றிய அறிவும் புரிதலும் முக்கியம். ஆரம்பத்திலேயே வளர்ச்சியை எதிர்நோக்காமல் அதற்கான காலம் வரும் வரை சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.