Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/அமிழ்தமிழ்து: தாவரத்திற்குத் தமிழ்ச்சொல் என்ன?

அமிழ்தமிழ்து: தாவரத்திற்குத் தமிழ்ச்சொல் என்ன?

அமிழ்தமிழ்து: தாவரத்திற்குத் தமிழ்ச்சொல் என்ன?

அமிழ்தமிழ்து: தாவரத்திற்குத் தமிழ்ச்சொல் என்ன?

PUBLISHED ON : ஜூலை 08, 2024


Google News
பிறமொழிச் சொற்கள் பலவற்றுக்கு நாம் உரிய தமிழ்ச்சொல்லை ஆக்கிவிட்டோமா? எண்ணற்ற சொற்களைத் தமிழாக்கிவிட்டோம். இலைமறைவில் பறிபடாமல் மறைந்துவிட்ட பழங்களைப்போல், சில பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள் பரவாமல் உள்ளன.

பிறமொழிச் சொல் என்று அறியப்படாமல் உள்ளவை எவை? அவை பிறமொழிச் சொற்கள் எனில் அவற்றுக்குரிய தமிழ்ச்சொற்கள் யாவை? அவற்றைப் பார்ப்போம்.

'சராசரி' என்று ஒரு சொல் உள்ளது. அதிலுள்ள 'சரி' தமிழிலும் உள்ளதால் தமிழ்ச்சொல்லாகவும் கொள்ளப்படுகிறது. சரிச்சரியான அளவு. இன்னொரு தரப்பினர் இதனை உருதுச்சொல் என்கின்றனர். சரிச்சரியான அளவு என்ற பொருளில் தமிழாகவும் கொள்ளலாம். சராசரி என்பதற்கு மாற்றாக 'நிரவளவு, பொதுநடுவு' போன்ற சொற்களையும் பரிந்துரைத்துள்ளனர்.

ஒரு நூலைப் படித்து முடித்தவர்களிடம், 'அதன் சாராம்சம் என்ன' என்று கேட்போம். சார அம்சம் என்பதில் உள்ள 'சார்' தமிழ். அது சார்ந்துள்ள பொருளடக்கம். ஆனால், அம்சம் வடசொல். இதனைத்தான் நாம் 'பொழிப்புரை, பொழிப்பு' என்கிறோம். நூற்பொருள் சார்ந்த உரையாடலில் 'பொழிப்புரை' என்றும், பிற இடங்களில் 'பொழிப்பு' என்றும் கூறலாம்.

சாதனை என்பதற்குக்கூட 'அருஞ்செயல்' என்று கூறுகின்றனர். இன்னொருவர் அதனைச் செய்வதற்கு அரிதாக வாய்ப்புள்ள பெருஞ்செயல் என்ற பொருளில் அமைவதுதான் சாதனை. 'அருஞ்செயல்' என்னும்போது பொருள் போதவில்லை. இத்தகைய சொற்களைத் தமிழில் பெருந்தொடர்களாகவே வழங்கலாம். 'அருந்திறச்செயல்' எனலாமே. 'சாதித்தார்' என்று சொல்லாமல், 'அருந்திறச்செயல் முடித்தார்' எனல் வேண்டும்.

ஜாதகம் பார்ப்பது என்கிறோம். அதனைக் 'காலக்கணிப்பு' போன்ற சொற்களைக் கொண்டு தமிழில் கூறுகிறோம். 'பிறப்புக்குறிப்பு' எனலாம். அந்தத் துறையையே 'பிறப்புக் குறிப்பியல்' என்றால் என்ன தவறு?

'தாவரம்' என்ற சொல்லுக்கு உரிய தமிழ்ச்சொல் என்ன? பொதுவாகக் கூறப்படுவது 'மரஞ்செடிகொடி' என்பதுவாம். அது தாவர இனத்தின் பிரிவினைக் கூறுவது. இதற்கொரு புதுச்சொல்லினை ஆக்குவோமே. தாவரம் என்பது என்ன? மண்ணில் வேர்பற்றிய உயிர். தாவரம் என்பதற்கு 'வேருயிர்' எனலாமே.

பரிணாமத்தில் இவை தோன்றின என்கிறோம். இங்கே பரிணாமம் என்பது என்ன? படிப்படியான வளர்ச்சி. அந்த வளர்ச்சி மேலும் மேலும் தகுதிப்பட்டபடி செல்லும். பரிணாமத்தை 'கூர்ப்படைவு' எனலாம்.

பூபாளம் என்பது 'புறநீர்மை' எனப்படுகிறது. பாசம் - அன்புத்தளை, இராட்டினம் - சுழலி, விந்தை - புதுமை எனப் பலபல சொற்கள் உள்ளன.

-மகுடேசுவரன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us