ADDED : ஆக 30, 2011 01:44 AM
நோன்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நாம், பல விஷயங்களை சிந்தித்தோம்.
இவற்றை அடிப்படையாகக் கொண்டு நமது பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.உலகில் நல்ல விஷயங்களும் இருக்கின்றன. படுகுழியில் தள்ளும் விஷயங்களும் இருக்கின்றன. எல்லா நவீன கண்டுபிடிப்புகளிலும் அறிவுப்பூர்வமான விஷயங்களும் உள்ளன. நேரத்தையும், மனதையும் வீணடிப்பவையும் இருக்கின்றன. இதில் நல்லதைத் தேர்ந்தெடுப்பவன் விரைவில் முன்னேறுவான். மற்றவர்கள் பின்தங்கி போவார்கள்.ஒரு முறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்களிடையே பேசும் போது, ''உங்கள் ஒவ்வொருவருக்கும் சொர்க்கமும், நரகமும் முன்பே எழுதப்பட்டுவிட்டது,'' என்றார்கள். உடனே மக்களில் சிலர், ''அப்படியானால், நாங்கள் எங்கள் மீது எழுதப்பட்ட விதியை ஒப்புக் கொண்டு அதன்படியே செயல்படலாம் அல்லவா?'' என்றனர். அதற்கு நாயகம்(ஸல்) அவர்கள், '' யார், தனது பொருளை செலவு செய்து இறைவனுக்கு பயந்து நன்மையான செயல்களை செய்கிறானோ அவனுக்கு சொர்க்கத்துக்கு செல்லும் பாதை காட்டப்படுகிறது. எவன் தன் பொருளை வழங்குவதில் கஞ்சத்தனம் செய்து இறைவனால் சொல்லப்பட்டதை அலட்சியம் செய்கிறானோ, அவனுக்கு துன்பம் மிகுந்த நரக வாழ்க்கைக்குரிய பாதை காட்டப்படுகிறது,'' என்றார்கள். இதில் இருந்து, இறைவன் தந்துள்ளவற்றில் நல்லதை தேர்ந்தெடுக்கும் உரிமையும், கெட்டதை தேர்ந்தெடுக்கும் உரிமையும் நமக்கு உள்ளது. கெட்டதை தேர்ந்தெடுத்தால் இவ்வுலகில் தற்காலிக சுகம் கிடைக்கலாம். ஆனால், மறுமை நாளில் நரகத்தில் கிடந்து வேக வேண்டும். இங்கே நல்லது செய்து சிரமப்பட்டாலும் பரவாயில்லை. சொர்க்கத்தில் இனிய வாழ்வை அனுபவிக்கலாம். எதைச் செய்ய வேண்டுமென நீங்களே தீர்மானித்துக் கொண்டு ரம்ஜான் திருநாளைக் கொண்டாட தயாராவோம்.


