ADDED : ஜூலை 19, 2011 12:42 AM
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் குழந்தைகள் திரைப்பட விழா நேற்று துவங்கியது.
இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கம், மாவட்ட நிர்வாகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் ஊட்டியில் வரும் 23ம் தேதி வரை குழந்தைகள் திரைப்பட விழா நடத்தப்படுகிறது. ஊட்டி அசெம்பளி தியேட்டரில் சுந்தரகாண்ட மகாபாரதம் (75 நிமிடங்கள்), அலங்கார் தியேட்டரில் 'அதிசய கோடு' (90 நிமிடங்கள்), கணபதியில் 'ஹயாத்' (80 நிமிடங்கள்), லிபர்ட்டியில் 'ஆயிசா' (32 நிமிடங்கள்) மற்றும் 'முதலில் நீங்கள்', கெம்பேகவுடரில் 'ஆறுபேர் ஆர்ப்பாட்டம்' (82 நிமிடங்கள்) போன்ற குழந்தைகளுக்கான திரைப்படம் காலை 9.30 மணிக்கு இலவசமாக காண்பிக்கப்படுகிறது.
இதன் துவக்க விழா ஊட்டி அசெம்ளி தியேட்டரில் நேற்று காலை நடந்தது. கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் திரைப்படவிழாவை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் குன்னூர் ஆர்.டி.ஓ., காந்திமதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் இனியன், அனைவருக்கும் கல்வி திட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன், குன்னூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜூ, பள்ளித்துணை ஆய்வாளர் துரை, போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் சண்முகவேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ, மாணவியருக்கான இலவச நுழைவு சீட்டுகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.