சொத்து கணக்கு காட்டாத உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு சிக்கல்
சொத்து கணக்கு காட்டாத உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு சிக்கல்
சொத்து கணக்கு காட்டாத உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு சிக்கல்

சொத்துக் கணக்கை சமர்ப்பிக்காத உள்ளாட்சி பிரதிநிதிகள், தேர்தலில் போட்டியிடுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 1999 ஆகஸ்ட் 30ம் தேதி, ஊரக வளர்சித் துறையின் அரசாணைப்படி சொத்து பட்டியல் சமர்ப்பிக்காத, உள்ளாட்சி அமைப்புகளில் பதவி வகித்தவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாது.ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் தங்கள் உள்ளாட்சி அமைப்பு கூட்டங்களில், ஆண்டுக்கு ஒரு முறை சொத்துக் கணக்கை சமர்ப்பித்து, ஒப்புதல் பெற்று, மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு சொத்துக் கணக்கு சமர்ப்பிக்காத உள்ளாட்சி பிரதிநிதிகள், தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகும். உள்ளாட்சி அமைப்புகளில் பதவி வகிப்போர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் அனைத்து சொத்துக்களின் விவரங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்த விவரங்களை, ஆண்டு தோறும் மார்ச் 31ம் தேதிக்குள், பதவி வகிக்கும் கால கட்டத்தின் ஒவ்வொரு ஆண்டுக்கும், சொத்துக் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சொத்துக் கணக்கு பட்டியலை, சொத்து விவர அறிக்கையை, நிர்வாக அதிகாரி, கமிஷனர், செயலர் ஆகிய மூவரில் ஒருவர் முன்னிலையில், ஊராட்சி கூட்டத்தில் வைக்கப்பட வேண்டும். அதன் ஒரு நகலை, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.ஊராட்சித் தலைவர், வார்டு கவுன்சிலர் ஊராட்சி கூட்டத்திலும், ஒன்றிய குழு உறுப்பினர், தலைவர் யூனியன் கவுன்சில் கூட்டத்தில் அனுமதி பெற்று, ஊராட்சி ஆய்வாளர்களுக்கு (கலெக்டர்) சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், தலைவர் ஆகியோர் சொத்துக் கணக்கை, மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தின் அனுமதியை பெற்று, ஊராட்சி ஆய்வாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதே போல் நகராட்சி தலைவர், கவுன்சிலர், மாநகர மேயர், கவுன்சிலர் ஆகியோர், நகராட்சி, மாநகராட்சி கூட்டங்களில் சொத்து பட்டியலை சமர்ப்பித்து அனுமதி பெற்ற பின், சென்øயில் உள்ள நகராட்சி நிர்வாக கமிஷனருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இந்த அரசாணையின்படி, தமிழகத்தில் பதவி முடிவுக்கு வரும் உள்ளாட்சி அமைப்புகளில் பதவி வகித்தவர்களில், 70 சதவீதத்தினருக்கு மேல், முறையாக தங்களின் சொத்துக் கணக்குகளை உள்ளாட்சி அமைப்பு கூட்டங்களில் வைத்து, அதன் பின், அதன் நகலை மாவட்ட கலெக்டர், நகராட்சி நிர்வாக கமிஷனரின் பார்வைக்கு கொண்டு செல்லவில்லை.
சொத்துக் கணக்கு சமர்ப்பிக்காதவர்கள் குறித்த விவரங்கள் அனைத்தையும், அரசு தயார் செய்து வருகிறது.தேர்தலில் வேட்பு மனு துவங்கி, மனு பரிசீலனையின் போது, இந்த விதியை காரணம் காட்டி, போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளவர்களில் பலரை, போட்டியில் இருந்து விலக வைப்பதற்கான திட்டமும் உள்ளது.
அலசும் அதிகாரிகள் : உள்ளாட்சி அமைப்பில் சொத்துக் கணக்கு சமர்ப்பிக்காதவர்கள் போட்டியிட முடியாது என்ற அரசாணை, 1999 ஆகஸ்ட் 30ல் நிறைவேற்றப்பட்ட போதிலும், அதிகாரிகள் பலர் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருந்ததால், இந்த விதியை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், வரும் உள்ளாட்சி தேர்தலில் இந்த விதியை நடைமுறைப்படுத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இந்த அரசாணை, அதன் உட்பிரிவுகள் குறித்த முழு விவரங்களையும், அரசு அதிகாரிகள் அலசத் துவங்கி விட்டனர்.
-நமது சிறப்பு நிருபர்-


