ADDED : செப் 15, 2011 09:19 PM
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் நள்ளிரவில் அரசு பஸ்சுக்கு தீ வைத்த கும்பலை போலீசார் தேடுகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தேவர்சிலை அவமதிப்பை கண்டித்து, நேற்று முன்தினம் மறியல், பஸ் மீது கல்வீச்சு நடந்தன. திடீர் பதட்டத்தால் போலீசாரும் குவிக்கப்பட்டனர். இதனிடையே , ராஜபாளையம் ஆவரம்பட்டி போக்குவரத்து டிப்போவில் இடப்பற்றாக்குறையால், ஆலங்குளம் செல்லும் டவுன்பஸ் நேற்று இரவு வெளியில் நிறுத்தப்பட்டிருந்தது. நள்ளிரவில் அங்கு வந்த மர்மகும்பல், பஸ்சின் கடைசி சீட்டில் தீ வைத்து, கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியது. அப்பகுதி மக்கள் மற்றும் இரவு பணி ஊழியர்கள் தீயை அணைத்தனர். மேலாளர் கார்த்திகேயன் புகார்படி ,ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர். புரளியால் தவித்த போலீஸ்: ராஜபாளையத்தில் பஸ் எரிப்பு, கல்வீச்சு, மறியல், அரிவாள் வெட்டு, கொலை என போலீசாருக்கு அடுத்தடுத்து தவறான தகவல்கள் வந்துகொண்டு இருந்தன. குறிப்பிடும் இடத்திற்கு சென்றபின்தான் புரளி என்பது போலீசாருக்கு தெரிந்தது. இது போன்று புரளியை கிளப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.