மாணவிகளை ராகிங் செய்தால் 5 ஆண்டு சிறை:ஐ.ஜி., சைலேந்திர பாபு எச்சரிக்கை
மாணவிகளை ராகிங் செய்தால் 5 ஆண்டு சிறை:ஐ.ஜி., சைலேந்திர பாபு எச்சரிக்கை
மாணவிகளை ராகிங் செய்தால் 5 ஆண்டு சிறை:ஐ.ஜி., சைலேந்திர பாபு எச்சரிக்கை
ADDED : ஆக 19, 2011 11:08 PM
சென்னை:''மாணவிகளை, மாணவர்கள் ராகிங் செய்தால், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்'' என, வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சைலேந்திர பாபு தெரிவித்தார்.சென்னை மருத்துவக் கல்லூரியில், நேற்று நடந்த ராகிங் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:பள்ளிகளிலிருந்து வரும் புதிய மாணவர்கள், தயக்கமின்றி அனைவரிடமும் பழக வேண்டும் என, நல்லெண்ணத்தில் தொடங்கப்பட்ட ராகிங் பழக்கம், இன்று திசை மாறி, தடம் மாறி உள்ளது. கல்லூரிக்கு வரும் இளம் மாணவர்கள், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருப்பர்.
மூத்த மாணவர்களின் ஒரு சொல் கூட, புதிய மாணவர்களின் உயிரையே குடித்து விடும். எனவே, புதிய மாணவர்களை, தம்பி, தங்கைகளாக நினைத்து, மூத்த மாணவர்கள் பழக வேண்டும்.சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி, ராகிங் சட்டங்கள் தற்போது கடுமையாக்கப்பட்டுள்ளன. ஒரு மாணவனை, ராகிங் செய்தது நிரூபிக்கப்பட்டால், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அதுவே, மாணவி ஒருவரை ராகிங் செய்தால், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க, சட்டத்தில் இடம் உள்ளது.
ராகிங் புகார் குறித்து, கல்லூரி முதல்வர் முறையாக விசாரிக்காவிட்டால், உடந்தையாக இருந்ததாகக் கருதி, அவர் மீதும் வழக்கு பதிவு செய்து, 2 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்க, சட்டத்தில் வழி உள்ளது.
ராகிங்கில் ஈடுபட்ட மாணவருக்கு, சிறை தண்டனையோடு அவர், இந்தியாவில் வேறு எந்தக் கல்லூரியிலும் படிப்பைத் தொடர முடியாது. அந்த மாணவரின் தந்தையே கல்லூரி நடத்தினாலும், அந்தக் கல்லூரியில் அவரால் சேர முடியாது.
ராகிங் செயலால், அப்பாவி இளைஞன் நாவரசு கொலை செய்யப்பட்டதோடு, ராகிங்கில் ஈடுபட்ட ஜான் டேவிட், டாக்டராவதற்கு பதில், வாழ்க்கையை சிறையில் தொலைத்து விட்டு, தன் பெற்றோருக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டார். எனவே, மாணவர்கள் ராகிங்கில் ஈடுபடக் கூடாது.இவ்வாறு, சைலேந்திர பாபு பேசினார்.


