ADDED : ஆக 15, 2011 06:58 PM
சென்னை: தி.மு.க., தலைமையகமான அறிவாலயத்தில் சுதந்திர தின விழா முதல் தடவையாக கொண்டாடப்பட்டது.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள, தி.மு.க., தலைமையகமான, அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க., அமைப்புச் செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தலைமையில், காலை 8 மணிக்கு தேசிய கொடியேற்றி, மரியாதை செய்யப்பட்டது.விழாவில், முன்னாள் அமைச்சர்கள் பொன்.முத்துராமலிங்கம், ராமச்சந்திரன், சென்னை மாநகர மேயர் சுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சேகர்பாபு, சங்கரி நாராயணன், மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் விஜயாதாயன்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் டி.கே.எஸ்., இளங்கோவன் நிருபர்களிடம் பேசும்போது,''மாநில முதல்வர்களுக்கு தேசிய கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கருணாநிதி.
தமிழகம் முழுவதும் தி.மு.க., உள்ளாட்சி மன்றத் தலைவர்கள், பிரதிநிதிகள், தேசியக் கொடியை மரபுப்படி, காலை 8 மணிக்கு ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடினர்,'' என்றார்.அப்போது,'ஊழல் காரணமாக, தேசிய அரசியலிலிருந்து தி.மு.க., தனிமைப்படுத்துள்ளதா?' என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு, 'தேசிய அரசியலிலிருந்து, தி.மு.க.,வை யாரும் தனிமைப்படுத்த முடியாது' என்று இளங்கோவன் கூறினார்.


