Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ தமிழை மறக்காத தமிழ் உறவுகள்!

தமிழை மறக்காத தமிழ் உறவுகள்!

தமிழை மறக்காத தமிழ் உறவுகள்!

தமிழை மறக்காத தமிழ் உறவுகள்!

ADDED : ஜூன் 15, 2025 09:00 AM


Google News
நம் நாட்டின் வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுகள் கூட்டம், அந்தமான் தீவுகள் என்று அழைக்கப்படுகின்றன. நம் நாட்டின் யூனியன் பிரதேசமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 572 தீவுகளை கொண்ட கூட்டம். இதன் தலைநகர் போர்ட் பிளேர்.

அலுவலக மொழியாக ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளன. பிற மொழி பேசுவர்களை எடுத்துக் கொண்டால் வங்காள மொழி, அடுத்த இடத்தில் உள்ளது.

இங்குள்ள தமிழர்களில் பலர், தமிழகத்தில் இருந்து வாழ்வாதாரத்தைத் தேடி குடியேறியவர்களே. கடல் கடந்து வாழ்ந்தாலும் நம் கலை, கலாசாரத்தை மறக்கவில்லை. இங்கு தமிழக அரசியல் கட்சிகளின் கிளைகளும் உள்ளன. இங்கே அனைத்துத் தரப்பு மக்களும் இந்திய கலாசாரத்தின்படி வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்போது சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பல தமிழர்கள், அந்தமான் தீவுகளுக்கு நாடு கடத்தப்பட்டனர். அந்தமானில் வாழும் தமிழர்களை பொதுவாக 'மதராசிகள்' என்றே அழைக்கின்றனர்.

இங்கு...

* தமிழ்நாட்டில் இருந்து வாழ்வாதாரத்தை தேடி குடிபெயர்ந்த தமிழர்கள்.

* பர்மாவில் ராணுவ ஆட்சி வந்த பிறகு, மியான்மரில் இருந்து குடிபெயர்ந்த தமிழர்கள்.

* இன மோதல்கள் தொடங்கிய பிறகு இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்த தமிழர்கள் என மூன்று விதமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் தமிழகத்தில் இருந்து சென்றவர்களே, பெரும்பாலும் அனைத்துத் தீவுகளிலும் காணப்படுகின்றனர். இவர்களின் எண்ணிக்கையே அதிகம்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏறக்குறைய 1 லட்சம் தமிழர்கள் உள்ளனர். சிதறி கிடக்கும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் 1952ல் அந்தமானி பொனிக்ஸ்பே, ஸ்ரீ விஜயபுரம் எனும் போர்ட்பிளேயரில் தமிழர் சங்கம் துவங்கப்பட்டது. பத்து ஆண்டுகள் வரை இந்த சங்கத்துக்கு சொந்த கட்டடம் இல்லாமல் இருந்தது. இதனால் பல்வேறு அரங்குகளில் தமிழ் நிகழ்ச்சிகளை நடத்தி, தமிழர் ஒற்றுமைக்கு வழிவகை செய்தனர்.

இந்த தமிழர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் பத்தாண்டுகளுக்குப் பிறகு 1961 ஜனவரி 24ல் கூடியது. அங்குள்ள தமிழ் பெருமக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தனர்.

சங்கத்துக்கு 15 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உட்பட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த கூட்டத்தில் தமிழர் சங்கத்திற்கான ஒரு அரங்க கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அப்போது நடந்த ஆண்டு விழாவில் கலை ஆர்வமுள்ள நாராயணன் விஜயராகவன் மேற்பார்வையில், பார்த்திபன் கனவு என்ற நாடகமும், குறவன் குறத்தி நடனமும் கரகாட்ட நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் கலை இலக்கிய நிகழ்ச்சிகளால் அங்குள்ள மக்கள் ஆனந்தக் கடலில் மூழ்கினர்.

அடுத்த நான்கு மாதங்களில், அதாவது மே மாதத்தில், போர்ட் பிளேரில் ரவீந்திரநாத் தாகூர் நுாற்றாண்டு விழா, தமிழர் சங்கம் சார்பில் அங்குள்ள 'ஸ்மிருத்தி' அரங்கில் நடத்தப்பட்டது.

அந்த விழாவில் ஆங்கிலம், ஹிந்தி, வங்காளம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளின் நாடகங்களும் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன. ராஜா ராணி என்ற தாகூரின் நாடகம் தமிழில் அரங்கேறியது. விழாவுக்கு அந்தமான் தலைமை ஆணையர் மகேஸ்வரி தலைமை தாங்கினார்.

அடுத்த ஜனவரி மாதம் புதுடில்லியிலிருந்து ராமகிருஷ்ண மடத்தின் தலைவர், ரங்கநாதர் ஆனந்த் அடிகளார் அந்தமான் தீவுகளுக்கு சுற்றுலா வந்திருந்தார். தமிழர் சங்க கட்டடம் கட்டுவதற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

அந்த அந்தமான் தமிழர் சங்கம் அன்று முதல் இன்று வரை ஜாதி, மதம் வேறுபாடுகள் இல்லாமல் ஒருங்கிணைந்து தமிழை வளர்க்கின்றனர். தமிழர் வீடுகளில் தமிழில் பேசுவதுடன் எழுத, படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த தமிழர் சங்கத்தின் தற்போதைய நிர்வாக குழுவில் தலைவராக லி.மூர்த்தி, துணைத் தலைவராக அ.தமிழ்ச்செல்வன், செயலர் காளிதாசன், பொருளாளர் இ.முத்து இருளன், துணைச் செயலர்களாக மோ.சுதாகர், மா.சேது ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக இரா.அழகர்சாமி, கா.முருகேசன், குகாட்டுராசன், இரா.முருகன், சி. கருணாநிதி, பா. முருகன், அ.மருது பாண்டியன், ஐ .பாலகணேசன், அ.இப்ராஹிம் ஆகியோரும் உள்ளனர்.

அந்தமான் தமிழர் சங்கம் தொடர்பு எண்: 8317859225.

இங்கு ஆண்டுதோறும் தமிழின உறவுகளை ஐக்கியம் ஆக்க, பொங்கல் கலாசார ஆடல், பாடல், கவியரங்கம், கருத்தரங்கு, தமிழிலக்கிய சொற்பொழிவு, தமிழறிஞர்களின் நுால்வெளியீடு நடத்துவது வழக்கம்.

பொங்கல் தமிழர் திருநாள், சித்திரை திருவிழா ஆகியவற்றை கொண்டாடி வருகின்றனர். ஆண்டுதோறும் தமிழ் எழுத்துக்கள் கொண்ட காலண்டர் வெளியிடப்படுகிறது.

தமிழறிஞர்கள் திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் பிறந்த நாள் விழாக்களும் தமிழர் சங்கத்தில் தவறாமல் நடத்தி வருகின்றனர்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us