Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் நவராத்திரி மஹோத்ஸவம் கோலாகலம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் நவராத்திரி மஹோத்ஸவம் கோலாகலம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் நவராத்திரி மஹோத்ஸவம் கோலாகலம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் நவராத்திரி மஹோத்ஸவம் கோலாகலம்

அக் 11, 2024


Latest Tamil News
புதுதில்லி இராமகிருஷ்ணாபுரம், 1வது செக்டாரில் அமைந்துள்ள, ஸ்ரீ காஞ்சி காமகோடி கலாச்சார பீடம் மையத்தில் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி பிரசித்தி பெற்ற நவராத்திரி மஹோத்ஸவம் காலை விக்னேஸ்வர பூஜையுடன் விமரிசையாக தொடங்கியது. அதைத் தொடர்ந்து, மகா சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறவும், சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்தவும் மற்றும் ஆன்மீக வளர்ச்சியை ஆதரிக்கவும்,தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற்ற மஹோத்ஸவத்தில் ஸ்ரீ மஹாபலேஷ்வர் பட் தலைமையில்அவஹந்தி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்ரீ மகாவிஷ்ணு ஹோமம், ஸ்ரீ நரசிம்ம மூல மந்திர ஹோமம், சுப்ரமணிய ஹோமம், நாமத்ரேயா ஜபம் மற்றும் ஹோமம், சூரிய மந்தர ஹோமம், தாரண சரஸ்வதி ஹோமம், மேதா தட்சிணாமூர்த்தி ஹோமம், லலிதா சஹஸ்ரநாம ஹோமம், சூர்ய நமஸ்காரம் மற்றும் ஏகாதசி ருத்ர பாராயணம் நடத்தப்பட்டன. வேத விற்பன்னர்கள் பலர் இதில் பங்கேற்று பாராயணம் செய்தனர். மேலும், நாள்தோறும் சிறப்பு அலங்கார பூஜைகளும், ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.


சரஸ்வதி பூஜையை முன்னிட்டு காலை சன்டி ஹோமம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். சரஸ்வதி பூஜையன்று சண்டி பூஜை செய்வதும் அந்த பூஜை எங்கு நடந்தாலும் அதில் கலந்து கொள்வதும் ரொம்பவே சக்தி வாய்ந்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். சிவனுக்கு ஒரு ராத்திரி, அம்பிகைக்கு நவராத்திரி என்பார்கள். நவராத்திரி என்பது பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் வரும்.


பக்தர்களை கவரும் வகையில் பிரதி தினமும், மாலையில் நாட்டியம், கர்நாடக இசைக் கச்சேரிகள் மற்றும் பஜனை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. மூத்த மற்றும் வளரும் இசைக் கலைஞர்கள் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். இசைக் கலைஞர்கள் ஸ்ரீ காஞ்சி காமகோடி கலாச்சார பீடம் மையம் சார்பில் சால்வை அணிவித்து கெளரவித்தனர்.


சக்தியின் பல்வேறு வடிவங்களை வழங்கும் புகழ்பெற்ற விழா, நவராத்திரி பண்டிகை. ஒன்பது நாட்கள், ஒன்பது விதமான சக்தியின் வடிவங்களை அம்மன் ரூபத்தில் கொண்டாடும் வகையில் இந்த பண்டிகை உள்ளது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடையில் உள்ள 3 நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது. நவராத்திரி விரதத்தை மேற்கொள்வோருக்கு விரும்பியது ஈடேறும் என்பதும், முப்பெரும் செல்வங்களான கல்வி, செல்வம், வீரத்தை அடைவார்கள் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.


- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us