Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ சுனிதா வில்லியம்ஸ் சொந்த ஊரில் கொண்டாட்டம்!

சுனிதா வில்லியம்ஸ் சொந்த ஊரில் கொண்டாட்டம்!

சுனிதா வில்லியம்ஸ் சொந்த ஊரில் கொண்டாட்டம்!

சுனிதா வில்லியம்ஸ் சொந்த ஊரில் கொண்டாட்டம்!

ADDED : மார் 20, 2025 02:12 AM


Google News

சொந்த ஊரில் கொண்டாட்டம்!

சுனிதா வில்லியம்சின் தந்தை தீபக் பாண்டயா, குஜராத் மாநிலம் மேஷானா மாவட்டம் ஜூலாசனைச் சேர்ந்தவர். கடந்த, 1957ல் அவர் அமெரிக்காவுக்கு சென்றார். தாய் உர்சுலின் போனி பாண்டயா, ஸ்லோவேனியாவைச் சேர்ந்தவர்.சுனிதா வில்லியம்ஸ், மூன்று முறை இந்தியாவுக்கு வந்துள்ளார். கடந்த 2007 மற்றும் 2013ல் விண்வெளி பயணங்களுக்குப் பின், இந்தியா வந்தார்; சொந்த ஊருக்கும் சென்றார். கடந்த 2008ல் பத்மபூஷண் விருதைப் பெறுவதற்காக வந்தார்.சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பியதை, ஜூலாசன் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அங்குள்ள கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த திரையில், சுனிதா பூமிக்கு திரும்புவதை, ஊர் மக்கள் ஒன்றாக கூடி பார்த்தனர்.முன்னதாக அவர் பத்திரமாக திரும்புவதற்காக, கோவிலில் பூஜை, யாகம் செய்யப்பட்டன. மேலும், அகண்ட தீபமும் ஏற்றி வழிப்பட்டனர்.



இஸ்ரோ தலைவர் பாராட்டு!

சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோரை மீண்டும் பூமிக்கு வரவேற்கிறோம். உங்களுடைய இந்தப் பயணம், விடாமுயற்சி, மன உறுதி ஆகியவை அபாரமான சாதனையாகும். இது விண்வெளி ஆய்வில், நாசா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் அமெரிக்காவின் உறுதிப்பாட்டை நிலைநிறுத்துகிறது. இந்திய அரசின் விண்வெளி துறைச் செயலராகவும், இஸ்ரோ தலைவராகவும், என் குழுவின் சார்பில், இந்த முயற்சிக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து கொள்கிறேன்.சுனிதா வில்லியம்ஸ், உலகெங்கும் உள்ள விண்வெளி ஆர்வலர்களுக்கு பெரும் உந்துசக்தியாக இருப்பார். இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கை எட்ட, சுனிதா வில்லியம்சின் அனுபவங்களை நிச்சயம் பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளோம்.-- வி.நாராயணன்,இஸ்ரோ தலைவர்



பிரதமர் மோடி வாழ்த்து!

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவை வரவேற்கிறோம்; உங்களை காணாமல் பூமி தவித்தது. விண்வெளி ஆய்வுப் பயணம் என்பது மனித ஆற்றலின் வரம்புகளுக்கு அப்பால், துணிச்சலாக கனவு காண்பது மற்றும் அந்தக் கனவுகளை நனவாக்கும் தைரியம் ஆகியவை ஆகும். சுனிதா வில்லியம்ஸ், ஒரு முன்னோடியாகவும், அடையாளமாகவும், தன் வாழ்நாள் முழுதும் இந்த உணர்வுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.இவர்களுடைய பயணமானது, பொறுமை, துணிச்சல் மற்றும் எல்லையற்ற மனித உணர்வுக்கு ஒரு சோதனையாக இருந்தது. விடாமுயற்சி என்றால் என்ன என்பதை மீண்டும் நமக்கு இவர்கள் நிரூபித்துள்ளனர். பரந்து விரிந்த, அறியப்படாத அவர்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடு, எதிர்கால மற்றும் நிகழ்கால சந்ததியினரை என்றென்றும் ஊக்குவிக்கும்.-- நரேந்திர மோடி, பிரதமர்



மற்றொரு இந்தியர் தயார்!

இந்தப் பயணம் வெற்றிகரமாக நடந்துஉள்ளது, எலான் மஸ்கின் நிறுவனத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் டிராகன் விண்கலம், 100 சதவீத வெற்றியை எட்டி, போட்டியாளர்களைவிட முன்னிலையில் இருக்க செய்துள்ளது.இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் அடுத்த பயணம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தாண்டு இறுதியில், நிறுவனத்தின் ஆக்சியாம் - 4 பயணம் நடக்க உள்ளது. இந்த விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்துக்கு, தனி நபர்களை அழைத்து செல்ல உள்ளது. இந்த, 14 நாள் பயணத்துக்கு தலைமை ஏற்க உள்ளார், இந்திய விமானப் படை குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா.விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் ராகேஷ் சர்மாவின் பயணத்துக்கு, 50 ஆண்டுக்குப் பின், விண்வெளிக்கு செல்ல உள்ள இரண்டாவது இந்தியராகிறார் சுதான்சு சுக்லா.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us