இஸ்ரேல் துாதரக ஊழியர்கள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
இஸ்ரேல் துாதரக ஊழியர்கள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
இஸ்ரேல் துாதரக ஊழியர்கள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
ADDED : மே 23, 2025 01:20 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் யூதர் அருங்காட்சியகம் அருகே, இஸ்ரேல் துாதரக ஊழியர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில், யூதர்களின் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.அருங்காட்சியகம் முன்நேற்று முன்தினம் இரவு சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், அவர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டார்.
இதில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்தனர். விசாரணையில், உயிரிழந்தது வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய துாதரகத்தில் பணிபுரியும் ஊழியர்களான யாரோன் லிஸ்சின்ஸ்கி, சாரா மில்கிராம் என தெரியவந்தது.
காதலரான இருவருக்கும் இந்த வாரம் திருமணம் நடக்கவிருந்த நிலையில், அவர்கள் கொல்லப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், துப்பாக்கியால் சுட்ட நபரை உடனடியாக கைது செய்தனர்.
அப்போது, 'பாலஸ்தீனத்துக்கு விடுதலை, காசாவுக்கு விடுதலை' என உரக்க கத்தியபடி அவர் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் சிகாகோவைச் சேர்ந்த எலியாஸ் ரோட்ரிக்ஸ், 30, என தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக, இஸ்ரேல் துாதரக அதிகாரிகளை குறி வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
வாஷிங்டனில் உள்ள எப்.பி.ஐ., எனப்படும் மத்திய புலனாய்வு பிரிவு அலுவலகம் அருகிலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.