இஸ்ரேலில் இருந்து 603 இந்தியர்கள் வருகை
இஸ்ரேலில் இருந்து 603 இந்தியர்கள் வருகை
இஸ்ரேலில் இருந்து 603 இந்தியர்கள் வருகை
ADDED : ஜூன் 24, 2025 06:27 AM
ஜெருசலேம் : போர் பதற்றம் அதிகரித்துள்ள இஸ்ரேலில் இருந்து தனி விமானங்கள் வாயிலாக இதுவரை, 603 இந்தியர்கள் தாயகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஈரான் மீது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் பதில் தாக்குதல் நடத்துகிறது. அப்பகுதிகளில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இச்சூழலில், இஸ்ரேல் மற்றும் ஈரானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க, 'ஆப்பரேஷன் சிந்து' நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
முதற்கட்டமாக, ஈரானில் இருந்து தனி விமானங்கள் வாயிலாக இதுவரை 2,003 இந்தியர்கள், பத்திரமாக அழைத்து வரப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களில் தவிக்கும் இந்தியர்கள், அதன் அண்டை நாடுகளான ஜோர்டான் மற்றும் எகிப்து எல்லை வழியாக அழைத்து வரப்படுகின்றனர். அங்கிருந்து தனி விமானங்கள் வாயிலாக, டில்லி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
முதற்கட்டமாக, இஸ்ரேலில் இருந்து ஜோர்டான் எல்லை வழியாக, 160 இந்தியர்கள் நேற்று டில்லி வந்தடைந்தனர். இரண்டாம் கட்டமாக, ஜோர்டான் மற்றும் எகிப்து எல்லைகளின் வழியாக இரண்டு தனி விமானங்களில், 443 இந்தியர்கள் டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடந்த இரண்டு நாட்களில், மொத்தம் 603 இந்தியர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.