அண்ணாமலை புதிய கட்சியை துவங்குவதாக பொய் பரப்புகின்றனர்: பா.ஜ., நாகேந்திரன் ஆவேசம்
அண்ணாமலை புதிய கட்சியை துவங்குவதாக பொய் பரப்புகின்றனர்: பா.ஜ., நாகேந்திரன் ஆவேசம்
அண்ணாமலை புதிய கட்சியை துவங்குவதாக பொய் பரப்புகின்றனர்: பா.ஜ., நாகேந்திரன் ஆவேசம்
ADDED : செப் 21, 2025 03:59 AM

மதுரை : ''ஓட்டுத் திருட்டு செய்திருந்தால், ஆட்சிக்கு, தி.மு.க., வந்திருக்க முடியுமா,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
மதுரையில், அவர் அளித்த பேட்டி:
ஓட்டுத்திருட்டு நடந்ததாக காங்., -எம்.பி., ராகுல் கூறி வருகிறார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் அப்படி நடந்தது. நாங்கள் ஓட்டுத்திருட்டு செய்திருந்தால், தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்திருக்குமா? இப்போது, ஆளுங்கட்சியாக இருக்குமா?
மத்தியில், காங்., -- தி.மு.க., கூட்டணி ஆட்சி நடந்தபோது, இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள், ஏராளமானோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிரதமராக மோடி பதவியேற்ற பின், ஒரு மீனவர் கூட கொல்லப்படவில்லை. துாக்கு தண்டனையில் இருந்தவரை கூட, மோடி மீட்டுக் கொண்டு வந்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இதுவரை தேர்தலை சந்திக்கவில்லை. ஆனால், அரசியலுக்கு வந்தவுடன் ஆட்சிக்கு வந்து விடுவோம் என நினைக்கிறார். தமிழக மக்கள், எதை வைத்து அவருக்கு ஓட்டளிப்பர்.
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, பா.ஜ.,வில்தான் இருக்கிறார். அவர், புதிய கட்சி தொடங்கப்போவதாக போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. இந்த பொய் செய்திகளை பரப்புவது தான் ஊடகங்களின் வேலையா? அவர் கட்சி தொடங்குவது போன்ற கேள்விகளை, தி.மு.க., சொல்லித்தான் ஊடகங்கள் கேட்கின்றனவா?
அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னையில் நாங்கள் தலையிட முடியாது.
எங்கள் கூட்டணிக்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் வந்தால் சேர்த்துக் கொள்வோம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பரும் இல்லை. கொள்கை அளவில் யாரும் கூட்டணி சேரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.