திருமண வரன் தேடுபவர்களிடம் மோசடி; எச்சரிக்கை அவசியம் என்கிறது போலீஸ்
திருமண வரன் தேடுபவர்களிடம் மோசடி; எச்சரிக்கை அவசியம் என்கிறது போலீஸ்
திருமண வரன் தேடுபவர்களிடம் மோசடி; எச்சரிக்கை அவசியம் என்கிறது போலீஸ்
ADDED : மார் 23, 2025 06:24 AM

சென்னை : 'திருமண வரன் தேடுபவர்களிடம், சைபர் குற்றவாளிகள் பண மோசடியில் ஈடுபட்டு வருவதால், எளிதில் யாரையும் நம்ப வேண்டாம்' என, காவல் துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக காவல் துறை இணையவழி குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சைபர் குற்றவாளிகள், பல நுட்பமான முறைகளை பயன்படுத்தி, அப்பாவி மக்களை ஏமாற்றி வருகின்றனர். சமீபத்தில் மோசடியாளர்கள், திருமண வரன் தேடும் தளங்களை பயன்படுத்தி, தங்கள் மோசடிகளை நடத்துகின்றனர்.
அவர்கள் திருமண தளங்களில் போலி கணக்குகளை உருவாக்கி, அந்த தளங்களில் வரன் தேடும் நபர்களை தொடர்பு கொண்டு, உரையாடல்கள் வாயிலாக நம்பிக்கையை பெறுகின்றனர். அவர்களுடன் நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டவுடன், மோசடிகளில் சிக்க வைக்கின்றனர்.
குறிப்பாக, உயர் வருமானம் தரும் போலி முதலீடு வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவது, வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பரிசுக்கான சுங்க கட்டணம் செலுத்த கேட்பது, அவசர நிலைக்காக பணம் கேட்பது என்ற அடிப்படையில், மோசடியில் ஈடுபடுகின்றனர்.
போலி முதலீட்டு தளங்களில், முதலில் சிறிய தொகையை முதலீடு செய்ய துாண்டிய பின், சிறிது லாபத்தை தருகின்றனர். பின், பெருந்தொகையை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்கின்றனர்.
அதன்படி, 2024 மற்றும் இந்தாண்டில் இதுவரை, 379 புகார்கள் பதிவாகியுள்ளன.
இந்த மோசடிகளை தடுக்க, தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு, திருமண வரன் தேடும் தளங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
போலி சுயவிபரங்களை உருவாக்குவதை தடுக்க, சரியான அடையாள சரிபார்ப்பு போன்ற நடவடிக்கைகளை கடைப் பிடிக்க அறிவுறுத்தப்பட் டுள்ளது.
தங்களுக்கு ஆன்லைனில் அறிமுகமாகும் நபர், வீடியோ அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளை தவிர்த்தால், அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஆன்லைனில் அறிமுகமாகும் நபர்களை எளிதில் நம்பி, பண முதலீடுகள் செய்ய வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.