Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பெண்ணையாறு நதிநீர் பங்கீடு சமரச குழு அமைக்க உத்தரவு

பெண்ணையாறு நதிநீர் பங்கீடு சமரச குழு அமைக்க உத்தரவு

பெண்ணையாறு நதிநீர் பங்கீடு சமரச குழு அமைக்க உத்தரவு

பெண்ணையாறு நதிநீர் பங்கீடு சமரச குழு அமைக்க உத்தரவு

ADDED : ஜன 24, 2024 11:13 PM


Google News
புதுடில்லி:தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பெண்ணையாறு நதிநீர் பங்கீடு தொடர்பாக சமரச குழு அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் துவங்கும் தென்பெண்ணையாறு, தமிழகம் வழியே புதுச்சேரி வரை சென்று கடலில் கலக்கிறது. இந்த தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே, 'யர்கோல்' என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டது.

இந்த முயற்சிக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை கடந்த 2019-ம் ஆண்டு விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக முதலில் மத்திய அரசை அணுகும்படி உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து, நதி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்கும்படி மத்திய அரசிடம் தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க தாமதமானதைத் தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பான மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின் 4ம் பிரிவின் கீழ் புதிதாக சமரச குழு அமைக்க மத்திய ஜல் சக்தி துறைக்கு உத்தரவிட்டனர்.

புதிதாக ஆட்சி அமைத்துள்ள கர்நாடக அரசு, சமரச குழு வாயிலாக தீர்வு காண முயற்சிப்பதாக தெரிவித்த கருத்தை ஏற்று, இந்த உத்தரவை பிறப்பிப்பதாக நீதிபதிகள் தெரிவித்ததுடன், இரண்டு வாரத்திற்குள் அதற்கான அறிவிப்பாணையை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us