வெம்பக்கோட்டை அகழாய்வில் ஈயம் கண்டுபிடிப்பு
வெம்பக்கோட்டை அகழாய்வில் ஈயம் கண்டுபிடிப்பு
வெம்பக்கோட்டை அகழாய்வில் ஈயம் கண்டுபிடிப்பு

சென்னை: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடந்த அகழாய்வில், முதல்முறையாக ஈயம் கிடைத்து உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை என்ற ஊரில், தமிழக தொல்லியல் துறை சார்பில், மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நடக்கிறது. இதில், கண்ணாடி மணிகள், அரிய கல்மணிகள், சுடுமண் பொம்மைகள், தங்க மணி, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், அகல் விளக்குகள், சங்கால் செய்யப்பட்ட பதக்கம், சுடுமண் ஆட்டக்காய்கள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு,'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: விருதுநகர் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், 87 சென்டிமீட்டர் ஆழத்தில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு கிடைத்துள்ளது. மேலும், முதல்முறையாக 102 செ.மீ., ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்மக்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பதக்கங்கள் மற்றும் இதர கலைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளதை உறுதிசெய்யும் வகையில் கிடைக்கப்பெற்றுள்ள இந்த புதிய கண்டுபிடிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி. இவ்வாறு அந்த பதிவில் அமைச்சர் கூறியுள்ளார்.