மல்லாக்கோட்டை குவாரி விபத்து சிங்கம்புணரி தாசில்தார் டிரான்ஸ்பர் கனிமவள ஆர்.ஐ., வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
மல்லாக்கோட்டை குவாரி விபத்து சிங்கம்புணரி தாசில்தார் டிரான்ஸ்பர் கனிமவள ஆர்.ஐ., வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
மல்லாக்கோட்டை குவாரி விபத்து சிங்கம்புணரி தாசில்தார் டிரான்ஸ்பர் கனிமவள ஆர்.ஐ., வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
ADDED : ஜூன் 01, 2025 01:03 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை குவாரியில் பாறை சரிந்து 6 பேர் பலியான சம்பவத்தில் தாசில்தார் பரிமளாவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். கனிமவள ஆர்.ஐ., மற்றும் வி.ஏ.ஓ., சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டை மேகா புளூ மெட்டல் குவாரியில் மே 20 ல் 400 அடி பள்ளத்தில் வெடிவைக்க துளையிட்ட போது பாறை சரிந்து 6 தொழிலாளர்கள் பலியாகினர். குவாரிக்கான உரிமம் 8 மாதத்துக்கு முன்பே காலாவதியான நிலையில் பல நுாறு அடி ஆழத்தில், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் குவாரி செயல்பட்டதும், ஏராளமான கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு விற்கப்பட்டதும் தெரியவந்தது. சம்பவம் நடந்தவுடன் அதிகாரிகள், குவாரி உரிமையாளரை பாதுகாக்கும் நோக்கத்துடன் அதனை மூடி மறைக்க முயன்றனர். நீண்ட இழுபறிக்கு பின்னரே குவாரி உரிமையாளர் மேகவர்ணம் உள்ளிட்டோர் மீது எஸ்.எஸ்.கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேகவர்ணம் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவரது தம்பி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் அதிகாரிகளிடம் வெளிப்படைத் தன்மை இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தினமலர் நாளிதழிலும் செய்தி வெளியானது.
தாசில்தார் டிரான்ஸ்பர்
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சிங்கம்புணரி தாசில்தார் பரிமளா நேற்று திருப்புத்துார், தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனி தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு 17 (பி) குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அங்கு பணிபுரிந்த தனி தாசில்தார் நாகநாதன் சிங்கம்புணரி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இருவரும் பணிநியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலகத்தில் உடனடியாக பணியேற்க வேண்டும். மாறுதல் தொடர்பாக எவ்வித கோரிக்கை மனுவோ, விடுப்பு மனுவோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. உடனடியாக பணி ஏற்கத் தவறினால் அடிப்படை விதி 108 மற்றும் அரசாணைப்படி, பணியேற்காத பணியிடை காலத்தை ஊதியம் இல்லாத விடுப்பாக கருதி ஆணை பிறப்பிக்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கனிமவளத்துறை ஆர்.ஐ., ஆக பணிபுரிந்த வினோத்குமார் (இவர் சில நாட்களுக்கு முன்னர் மானாமதுரை மண்டல துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்றுள்ளார்) மற்றும் மல்லாக்கோட்டை கிராம வி.ஏ.ஓ., பாலமுருகன் ஆகியோரை கலெக்டர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.