இரு மதத்தினரிடையே பிரிவினைவாத பேச்சு: மத போதகர் மீது சர்ச் உறுப்பினர்களே புகார்
இரு மதத்தினரிடையே பிரிவினைவாத பேச்சு: மத போதகர் மீது சர்ச் உறுப்பினர்களே புகார்
இரு மதத்தினரிடையே பிரிவினைவாத பேச்சு: மத போதகர் மீது சர்ச் உறுப்பினர்களே புகார்
ADDED : ஜூலை 05, 2024 04:17 AM

கோவை: கோவை சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச்சில் ஜூன், 16ம் தேதி நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் மதபோதகர் பிரின்ஸ் கால்வின் பேசிய 'வீடியோ' ஹிந்து அமைப்பினரிடையே கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.
அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு கடந்த, 2ம் தேதி ஹிந்து மக்கள் கட்சியினர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், ஹிந்து முன்னணியினர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளித்தனர். அன்று இரவே ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கும் பதிவு செய்தனர்.
மறுநாள், மதபோதகர் பிரின்ஸ் கால்வின் மீது நான்கு பிரிவுகளில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. இதுவரை அவரை கைது செய்யாது போலீசார் வேடிக்கை பார்ப்பதாக ஹிந்து அமைப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இச்சூழலில், சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச் உறுப்பினர்களே, மதபோதகர் பிரின்ஸ் கால்வின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளதால் கைது நெருக்கடி அதிகரித்துள்ளது.
ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் சர்ச் உறுப்பினர் ஜோஸ்வா டேனியல் அளித்த புகார் மனுவில், 'ஆலய வழிபாட்டில் பிரின்ஸ் கால்வின் பேசியது, ஹிந்து மத நம்பிக்கைக்கு அவதுாறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும், இந்திய இறையாண்மையை சீர்குலைக்கும் வகையிலும், இரு மதத்தினரின் நல்லுறவை கெடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
ஹிந்து மதத்தின் நம்பிக்கையையும் கேவலமாக சித்தரித்துள்ளார். எங்கள் ஆலயத்தின் புனிதமான பலிபீடத்தை தன் சுயலாபத்துக்கு பயன்படுத்தியதால் எங்கள் திருச்சபை மக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். இவ்வாறு இரு மதத்தினரிடையே பிரிவினையை துாண்டும் வகையில் பேசிய பிரின்ஸ் கால்வின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜோஸ்வா டேனியலிடம் கேட்டபோது, ''ஹிந்து - கிறிஸ்தவ மக்களிடம் பிரிவினையை துாண்டும் பிரின்ஸ் கால்வின் மீது, பேராயர் தீமோதி ரவீந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பேராயர் மீதும் நடவடிக்கை எடுக்க நாங்கள் போராடுவோம்,'' என்றார்.