'ஹெபடைடிஸ் பி' தடுப்பூசி விலை 300 மடங்கு அதிகரிப்பு
'ஹெபடைடிஸ் பி' தடுப்பூசி விலை 300 மடங்கு அதிகரிப்பு
'ஹெபடைடிஸ் பி' தடுப்பூசி விலை 300 மடங்கு அதிகரிப்பு
ADDED : மார் 20, 2025 04:59 AM

'குழந்தைகளுக்கு மூன்று தவணைகளாக செலுத்தப்படும், 'ஹெபடைடிஸ் பி' தடுப்பூசி விலை, 300 மடங்கு வரை உயர்த்துள்ளதால், விலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ், தடுப்பூசியை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்' என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய மருத்துவ சங்க தெற்கு மண்டல துணைத்தலைவர் டாக்டர் அழக வெங்கடேசன் கூறியதாவது:
'ஹெபடைடிஸ் பி' தடுப்பூசி, உடலில் நோய்த்தொற்றை தடுக்கிறது. வைரசால் ஏற்படும், 'சிர்ரோசிஸ்' எனப்படும் கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை, ஹெபடைடிஸ் பி தடுக்க உதவும். இதனாலேயே குழந்தை பிறந்தவுடன் இத்தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. நர்சிங், துணை மருத்துவம், மருத்துவம் படிப்பவர்கள் இந்த தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் பெறுவது அவசியம். எந்த வயதினராக இருந்தாலும் மூன்று டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
திடீர் தட்டுப்பாடு
ஒரு டோஸ் தடுப்பூசி, 20 முதல் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கியதால், அரசு மருத்துவமனைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, சீரான விற்பனை நடக்கும் நிலையில், விலையை மட்டும் அனைத்து நிறுவனங்களும், 300 மடங்கு வரை உயர்த்தியுள்ளன.
அரசு மருத்துவமனை செல்ல விரும்பாதவர்கள் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்துகின்றனர். ஒவ்வொருவருக்கும், மூன்று டோஸ் வீதம் கிட்டத்தட்ட, 1,700 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதால், நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்படுகின்றனர்.
தடுப்பூசி இலக்கை அடைவதையும், இந்த விலை உயர்வு பாதிக்கும். இதுகுறித்து தமிழக அளவில் மாநில அளவிலான சுகாதாரத்துறை கூட்டத்திலும் தெரிவித்தோம். ஹெபடைடிஸ் பி மட்டுமின்றி, தேசிய தடுப்பூசி திட்ட அட்டவணைப் பட்டியலில் உள்ள அனைத்து தடுப்பூசிகளையும், விலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-- நமது நிருபர் -