இலக்குகளை திமுக அரசால் எட்டிப்பிடிக்க முடியவில்லை: ராமதாஸ்
இலக்குகளை திமுக அரசால் எட்டிப்பிடிக்க முடியவில்லை: ராமதாஸ்
இலக்குகளை திமுக அரசால் எட்டிப்பிடிக்க முடியவில்லை: ராமதாஸ்
ADDED : மார் 13, 2025 08:51 PM

சென்னை: 'தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த இலக்குகளை தி.மு.க., அரசால் எட்டிப்பிடிக்க முடியவில்லை' என்று பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
அவரது அறிக்கை:
தமிழக அரசின் பொருளாதார ஆய்வறிக்கை திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலமாக உள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள 2024-25ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை அளிக்கும் வகையில் எதுவும் இல்லை.
எடுத்துக்காட்டாக 2023-24ம் ஆண்டில் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு (ஜி.எஸ்.டி.பி) ரூ.28,32,678.98 லட்சம் கோடியாக இருக்கும் என்று தி.மு.க., அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அதில் ஒரு லட்சம் கோடிக்கும் குறைவாக ரூ.27,22, 501.95 லட்சம் கோடி என்ற அளவையே தமிழக பொருளாதாரம் எட்டிப்பிடித்திருக்கிறது.
வரும் 2030ம் ஆண்டில் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூ.88 லட்சம் கோடி என்ற அளவுக்கு உயர்த்தப்போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை பொருளாதார ஆய்வறிக்கை உறுதி செய்திருக்கிறது. தமிழகத்தின் பொருளாதாரம் தொடர்ச்சியாக ஆண்டுக்கு 12 விழுக்காட்டுக்கும் கூடுதலாக வளர்ச்சியடைந்தால் தான் அது சாத்தியமாகும் .
உண்மையில் இந்த இலக்கை அடைய 18 விழுக்காட்டுக்கும் கூடுதலான வளர்ச்சி தேவை. ஆனால், அடுத்து வரும் சில ஆண்டுகளுக்கு தமிழகத்தின் பொருளாதாரம் ஆண்டுக்கு 8 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியடையும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
மக்களுக்கு புரியும் மொழியில் சொல்வதென்றால், 2021-22ம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ரூ. 20 லட்சம் கோடியாக இருந்தது. 2023-24ம் ஆண்டில் அது 27.22 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இரு ஆண்டுகளில் ரூ.6.50 லட்சம் கோடி மட்டுமே பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், அடுத்த 7 ஆண்டுகளில் இன்னும் 50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்துவது சாத்தியமற்றது.
இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.