குரங்குகளால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு
குரங்குகளால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு
குரங்குகளால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜன 31, 2024 07:15 AM
மதுரை: பழச் செடிகளை குரங்குகள் சேதப்படுத்தியதற்கு இழப்பீடு கோரிய வழக்கில் தமிழக அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே மேலக்கோட்டம் தாயுமன் தாக்கல் செய்த மனு:
முசிறி அருகே மூவனுாரில் எனக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அங்கு 2021 ல் பப்பாளி, 2020 ல் கொய்யா செடிகளை நடவு செய்தோம். சில பப்பாளிச் செடிகள், வாழை, கொய்யா பழங்களை குரங்குகள் சேதப்படுத்தின. இழப்பீடு கோரி கலெக்டரிடம் மனு அளித்தேன். இது தோட்டக் கலைத்துறை துணை மற்றும் உதவி இயக்குனர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உதவி இயக்குனர் ஆய்வு செய்து மாவட்ட வன அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பித்தார். இழப்பீடு வழங்கவில்லை. ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி வி.பவானி சுப்பராயன் விசாரித்தார்.
அரசு தரப்பு: மனுதாரரின் மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி: குரங்குகளால் ஏற்பட்ட சேதங்களை இந்நீதிமன்றம் கண்டறிந்து உறுதி செய்ய முடியாது. சேதங்களை அரசுத் தரப்பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளான எதிர்மனுதாரர்கள் மதிப்பீடு செய்து உரிய தொகையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என இந்நீதிமன்றம் கருதுகிறது. மனுவை 16 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.