வன உயிரின ஆய்வாளர் ஜான்சிங் காலமானார்
வன உயிரின ஆய்வாளர் ஜான்சிங் காலமானார்
வன உயிரின ஆய்வாளர் ஜான்சிங் காலமானார்
ADDED : ஜூன் 08, 2024 01:40 AM

சென்னை:தமிழகத்தை சேர்ந்த மூத்த வன உயிரின ஆய்வாளர் ஏ.ஜெ.டி.ஜான்சிங், 78, உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலை காலமானார்.
நாகர்கோவிலில், 1945 அக்., 14ல் பிறந்தவர் ஏ.ஜெ.டி. ஜான்சிங். வன உயிரினங்கள் குறித்த பல்வேறு ஆய்வுகளில் வன உயிரியலாளராக இவர் ஈடுபட்டுள்ளார்.
இந்திய வன ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் ஆலோசகர் போன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இந்திய வனப்பணி அதிகாரிகளுக்கான பயிற்சியாளராகவும், பல்வேறு கல்வி நிறுவனங்களில் வன உயிரினங்கள் தொடர்பான பேராசிரியராகவும், ஜான்சிங் பணி புரிந்துள்ளார்.
மத்திய அரசின் யானைகள் திட்டம் உருவாக காரணமாகவும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
இவரது ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் இத்துறையில், ஆய்வில் ஈடுபடுவோருக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. இவரது மனைவி கவுசல்யா சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், மைக், மெர்வின் என்ற இரு மகன்களுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். உடல் நலக்குறைவால், நேற்று அதிகாலை அவர் இறந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இவரது மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹூ உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.