ஆம்ஸ்ட்ராங் படுகொலை பழிக்கு பழியா? ஆற்காடு சுரே ஷ் பிறந்த நாளில் நிறைவேற்றப்பட்ட சபதம்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை பழிக்கு பழியா? ஆற்காடு சுரே ஷ் பிறந்த நாளில் நிறைவேற்றப்பட்ட சபதம்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை பழிக்கு பழியா? ஆற்காடு சுரே ஷ் பிறந்த நாளில் நிறைவேற்றப்பட்ட சபதம்
ADDED : ஜூலை 07, 2024 02:13 AM

சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், 52, நேற்று முன்தினம் இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ரவுடி 'ஆற்காடு' சுரேஷின் தம்பி பாலு உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட, 'ஆற்காடு' சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக, கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேலும், ஆற்காடு சுரேஷ் பிறந்த நாள் அல்லது இறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல வேண்டும் என, கொலையாளிகள் முன்னரே தீர்மானித்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் ஆற்காடு சுரேஷின் பிறந்த நாள் என்பதால், அன்றைய தினத்தை கொலை செய்வதற்கு தேர்வு செய்த ஆற்காடு பாலு, திட்டமிட்டபடி ஆம்ஸ்ட்ராங்கை கொன்று விட்டு, கத்தியோடு தப்பியோடிஉள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆற்காடு சுரேஷ் படத்தை வைத்து பூஜை செய்துள்ளார். அப்போது, ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதில் வெளிப்பட்ட ரத்தக் கறைகளுடன் கூடிய கத்தியையும் வைத்து வழிபட்டுள்ளார்.
சபதம் நிறைவேறியதைத் தொடர்ந்து, மேற்கொண்டு எங்கும் தப்பியோடாமல் சென்னை, அண்ணாநகர் போலீஸ் துணைக் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து, கொலையாளிகளுடன் பாலு சரண்டர் ஆகி இருக்கிறார் என, போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
சாலை மறியல்
ஆம்ஸ்ட்ராங் கொலையைக் கண்டித்து, அவரது ஆதரவாளர்கள், சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, பெரம்பூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, உளுந்துார்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பதே, அவர்களின் கோரிக்கையாக இருந்தது. தமிழகத்தில் சட்டம் -- ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும், போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்கிடையில், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை 7:45 மணி முதல் 9:45 மணி வரை பிரேத பரிசோதனை நடந்தது.
பிரேத பரிசோதனை முடிந்த பின், ஆம்ஸ்ட்ராங் உடலை, அவரது ஆதரவாளர்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்றனர். அதனால் உடலை ஆம்புலன்சில் ஏற்ற விடாமல் தடுத்தனர்.
மூடப்பட்ட கடைகள்
இதனால், போலீசாருக்கும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின், ஆம்ஸ்ட்ராங் உடல் நேற்று மாலை, குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி, இன்று சென்னை வந்து, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்.
'உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், முதல்வர் ஸ்டாலின், காங்., - எம்.பி., ராகுல், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன், வி.சி., தலைவர் திருமாவளவன், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா ஆகியோர், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ஆம்ஸ்ட்ராங் மறைவை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை பெரம்பூரில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க, போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
பெரம்பூரில் உள்ள பள்ளி வளாகத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று, இறுதிச்சடங்கு நடக்க உள்ளது. பெரம்பூரில் அவருக்கு சொந்தமான நிலத்தில், அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்' என, அவரது ஆதரவாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.