Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கொலை மிரட்டல் வழக்கில் விஜயபாஸ்கர் மீண்டும் கைது

கொலை மிரட்டல் வழக்கில் விஜயபாஸ்கர் மீண்டும் கைது

கொலை மிரட்டல் வழக்கில் விஜயபாஸ்கர் மீண்டும் கைது

கொலை மிரட்டல் வழக்கில் விஜயபாஸ்கர் மீண்டும் கைது

ADDED : ஜூலை 19, 2024 12:14 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கரூர்: ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், கொலை மிரட்டல் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர், தொழிலதிபர் பிரகாஷ், 50. இவரது மகள் ஷோபனா பெயரில், கரூர் அருகே குன்னம்பட்டி, தோரணகல்பட்டியில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை, போலியான ஆவணங்கள் வாயிலாக யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், செல்வராஜ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் ஆகியோர் கிரையம் செய்து கொண்டதாக, கரூர், மேலக்கரூர் சார் - பதிவாளர் முகமது அப்துல் காதர், கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்ந்து தொழிலதிபர் பிரகாஷும், தோரணகல்பட்டியில் இருக்கும், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள, 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் மற்றும் ஆதரவாளர்கள், போலி ஆவணங்கள் வாயிலாக பத்திரப்பதிவு செய்து அபகரித்து கொண்டதோடு, இதைக் கேட்டதும் கொலை மிரட்டல் விடுத்ததாக, வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில், ஜூன் 22ல் புகாரளித்தார்.

அதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்ளிட்ட பலர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில், வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கும் வழக்கு மற்றும் வாங்கல் போலீசார் பதிந்துள்ள வழக்கில் முன்ஜாமின் கேட்டு, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில், கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, ஜூலை 6ல் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, கேரள மாநிலம், திருச்சூரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வரும் ஜூலை 31 வரை, நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது, திருச்சி மத்திய சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், நேற்று கைது செய்யப்பட்டார். இந்த தகவல், சிறையில் உள்ள விஜயபாஸ்கரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில், கொலை மிரட்டல் வழக்குத் தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்படுவார் என, போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us