அமைச்சர் குறித்து வீடியோ; ஆதரவாளர்கள் தாக்கியதாக புகார்
அமைச்சர் குறித்து வீடியோ; ஆதரவாளர்கள் தாக்கியதாக புகார்
அமைச்சர் குறித்து வீடியோ; ஆதரவாளர்கள் தாக்கியதாக புகார்
ADDED : ஜூன் 01, 2024 02:19 AM

காரைக்குடி : காரைக்குடியில் அமைச்சர் பெரியகருப்பன் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறி டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு ரத்த காயங்களுடன் தி.மு.க., நிர்வாகி வந்தார்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் பொய்யலுார் ஊராட்சியை சேர்ந்தவர் சரவணன் 60. தி.மு.க.,வை சேர்ந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் பெரிய கருப்பன் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில், அமைச்சரை சந்தித்து, எனது மகனுக்கு கல்லுாரியில் சீட் பெறுவது தொடர்பாக பேசினேன். அது குறித்து அவர் பேசாமல் என்னிடம் தரக்குறைவாக நடந்து கொண்டார். அடிமட்ட தொண்டர்களும் கழகமும் இதை கவனிக்க வேண்டும். அமைச்சர் ஜாதி அரசியல் செய்கிறார். 40 ஆண்டுகளாக தி.மு.க.வில் இருக்கிறேன். இதை முதல்வர் ஸ்டாலின் கவனத்தில் கொள்ளாவிட்டால் கட்சி அழிந்து விடும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று பலத்த ரத்தக்காயங்களுடன் காரைக்குடி டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு சரவணன் புகார் அளிக்க வந்தார்.
அவர் கூறியதாவது:
நான் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தேன். அது தொடர்பாக எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்தது. தேவகோட்டை ரஸ்தா அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த என்னை கீழே தள்ளி சிலர் அமைச்சரையா பேசுகிறாய் என்று சொல்லி சொல்லி இரும்புக்கம்பியால் அடித்தார்கள் என்றார்.
டி.எஸ்.பி., பிரகாஷ் கூறும்போது, காயம் அடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். போலீசாரை அனுப்பி விசாரிக்கும் படி தெரிவித்துள்ளேன். விசாரணைக்கு பிறகு நடந்தது குறித்து தெரியவரும் என்றார்.