உலக தடகள போட்டியில் பங்கேற்க நிதியின்றி தவிக்கும் திருச்சி வீரர்
உலக தடகள போட்டியில் பங்கேற்க நிதியின்றி தவிக்கும் திருச்சி வீரர்
உலக தடகள போட்டியில் பங்கேற்க நிதியின்றி தவிக்கும் திருச்சி வீரர்
UPDATED : ஜூலை 10, 2024 07:55 AM
ADDED : ஜூலை 10, 2024 01:20 AM

சென்னை:ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டிக்கு தேர்வாகியும், போதிய நிதியில்லாததால் தேசிய தடகள வீரர் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையம் ரஞ்சிதபுரம், பழைய பாண்டியன் தெருவில் வசிப்பவர் விஹேஷ்ராஜ், 18; பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தந்தையில்லாத இவர், தாயின் சொற்ப வருவாயில் படிப்பதுடன், தடகள வீரராகவும் ஜொலித்து வருகிறார்.
இவர், 18 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில், 1,500 மீட்டர் ஓட்டத்தில் மாவட்ட அளவில் 5 தங்கம், மாநில அளவில் 4 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கம் வென்று, சாதனை படைத்துள்ளார்.
ஐந்தாண்டுகளாக கடுமையான தடகள பயிற்சி பெற்று வரும் இவர், பீஹார், அசாம் மாநிலங்களில் நடந்த தேசிய போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.
கடந்த மாதம், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான தடகள போட்டியில், 1,000 மீட்டர் துாரத்தை, 2:38 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார்.
வரும் செப்., 3ல், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் நடக்க உள்ள, உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டிக்கு தேர்வாகி உள்ளார். அதில், 90 மீட்டர் ஸ்பிரின்ட் ஓட்டம், 90 X 4 மீட்டர் அஞ்சல் ஓட்டம், 25 மீட்டர் பீச் க்ளாக் ஓட்டங்களில் பங்கேற்க உள்ளார்.
ஆனாலும், ஆஸ்திரேலியாவுக்கான விமான டிக்கெட், போட்டி கட்டணத்துக்கான, 1.50 லட்சம் ரூபாய் இல்லாததால், போட்டியில் பங்கேற்க சிரமப்படுகிறார்.
இவருக்கு நிதி உதவ மனமுள்ளோர், 'என்.கே.விஹேஷ் ராஜ், இந்திய யூனியன் வங்கி, படூர் அக்ரஹாரம் கிளையின், 520481030318766 கணக்கு எண்ணிக்கு நிதி அளித்து உதவலாம். வங்கியின் ஐ.எப்.எஸ்.சி., கோடு: UBIN0919225.
மேலும் விபரங்களுக்கு, விஹேஷ்ராஜை, 95850 38532 என்ற மொபைல் எண்ணிலும், viheshraj -_1500m என்ற இன்ஸ்டாகிராம் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.