மருத்துவமனைகளில் காப்பீடு எண் பதிவு செய்வது இனி கட்டாயம்
மருத்துவமனைகளில் காப்பீடு எண் பதிவு செய்வது இனி கட்டாயம்
மருத்துவமனைகளில் காப்பீடு எண் பதிவு செய்வது இனி கட்டாயம்
ADDED : ஜூன் 07, 2024 01:53 AM
சென்னை, மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் அனைத்து நோயாளிகளின் காப்பீட்டு விபரங்களை பதிவு செய்யுமாறு, தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, ஆணையத்தின் தகவல் தொழில்நுட்ப செயலர் பி.ஸ்ரீனிவாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடர்பாக, சில நாட்களுக்கு முன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
அதில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி, மருத்துவமனையில் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வருவோருக்கு, மருத்துவமனை சார்பில் வழங்கப்படும் பதிவு எண்ணுடன் சேர்த்து, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அடையாள எண்ணையும் குறிப்பிட வேண்டும்.
அதன் விபரங்கள் அனைத்தும், மருத்துவ கல்லுாரிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கும் போது தணிக்கை செய்யப்படும். அதேநேரம், ஆயுஷ்மான் பாரத் எண் இல்லாவிட்டால், அதை காரணமாக வைத்து சிகிச்சை வழங்கவும் மறுக்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைந்து, ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்படுவதால், மாநில அரசின் காப்பீட்டு எண்ணை வழங்கினால் போதுமானது என்று, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.