Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/எல்.வி.புரம் கொசஸ்தலையாற்றில் தடுப்பணை அமைப்பது...எப்போது?: கூடுதலாக 2,000 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்

எல்.வி.புரம் கொசஸ்தலையாற்றில் தடுப்பணை அமைப்பது...எப்போது?: கூடுதலாக 2,000 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்

எல்.வி.புரம் கொசஸ்தலையாற்றில் தடுப்பணை அமைப்பது...எப்போது?: கூடுதலாக 2,000 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்

எல்.வி.புரம் கொசஸ்தலையாற்றில் தடுப்பணை அமைப்பது...எப்போது?: கூடுதலாக 2,000 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்

ADDED : ஜூன் 07, 2024 02:01 AM


Google News
Latest Tamil News
திருவாலங்காடு:எல்.வி.புரம் கொசஸ்தலையாற்றில் தடுப்பணை கட்டினால், கூடுதலாக 2,000 ஏக்கரில் விவசாயம் செய்ய முடியும். 10 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளதால், விரைந்து தடுப்பணை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் கேசாவரம் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் நீர், கொசஸ்தலையாற்றில் கலந்து, அரக்கோணம் தக்கோலம் வழியாக திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம், ஓரத்துார் பாகசாலை வழியாக பாய்ந்து பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடையும்.

ஒவ்வொரு ஆண்டு பருவமழையின் போதும் கொசஸ்தலையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பூண்டி ஏரி நிரம்பியதும், தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த நீரை சேமித்தால், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்.

இந்நிலையில், திருவாலங்காடு ஒன்றியம், பாகசாலை அல்லது எல்.வி.புரம் கொசஸ்தலையாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என, 15 ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து, 2020ம் ஆண்டு திருவாலங்காடு நீர்வளத்துறை பொறியாளர் தலைமையிலான அதிகாரிகள், எல்.வி.புரம் கொசஸ்தலையாற்றில் இடம் தேர்வு செய்து, மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்பின், இங்கு தடுப்பணை அமைப்பதற்கான திட்ட மதிப்பீட்டை தயாரித்து அரசுக்கு முன்மொழிந்தனர். நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது வரை தடுப்பணை அமைப்பதற்கான பணி துவங்காததால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஓரத்துாரைச் சேர்ந்த விவசாயி தணிகாசலம் கூறியதாவது:

தற்போது எல்.வி.புரம், பாகசாலை, ஓரத்துார், களாம்பாக்கம் உட்பட 11 கிராமங்களில், 6,000 ஏக்கரில் மூன்று போகம் விவசாயம் செய்யப்படுகிறது.

இந்த தடுப்பணை அமைந்தால், இப்பகுதிகளில் தரிசாக உள்ள 2,000 ஏக்கர் நிலத்தில் கூடுதலாக பயிர் செய்ய முடியும். இந்த பகுதிகளில் விவசாயம் மட்டுமே பிரதான தொழில்.

மேலும், விளைநிலங்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும். தற்போது, 50 சதவீத விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர்.

இதனால், நிலத்தடி நீர்மட்டம் அடிமட்டத்திற்கு சென்று விட்டது. ஏரி மற்றும் ஆற்று பாசனத்தை நம்பி இருக்கும் மற்ற விவசாயிகளுக்கு, அறுவடை காலத்தில் தண்ணீர் கிடைக்காமல், பணம் கொடுத்து பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

இந்த தடுப்பணை அமைத்தால் ஓரத்துார், பாகசாலை, பொன்னாங்குளம், குப்பம்கண்டிகை, எல்.வி.புரம், மணவூர் உள்ளிட்ட 10 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கோடைக்காலத்திலும் விவசாய நிலங்களுக்கு நீர் கிடைக்கும்.

மேலும் எல்.வி.புரம், மணவூர், குப்பம்கண்டிகை பகுதியில் ஆற்றில் ஏற்படும் வெள்ளத்தால், ஆற்றுநீர் விளைநிலம் மீது பாய்வது தடுக்கப்படும்.

இதன் வாயிலாக 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவர். எனவே, நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டத்தின் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எல்.வி.புரம் கொசஸ்தலையாற்றில், 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில், 230 மீ., நீளம், 2 மீ., உயரத்திற்கு 22 கோடி ரூபாயில் தடுப்பணை அமைக்க, அரசுக்கு திட்ட மதிப்பீட்டை அனுப்பி வைத்துள்ளோம். இதன் வாயிலாக, 30 மில்லி கன அடி நீர் சேமிக்கப்படும். பணி துவங்கினால் ஓராண்டில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீர்வளத் துறை பொறியாளர்,

திருவள்ளூர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us