அரசு பஸ்சில் மகளிருக்கு இலவசம்: 'ஈ அடிக்கும்' தனியார் பஸ்கள்
அரசு பஸ்சில் மகளிருக்கு இலவசம்: 'ஈ அடிக்கும்' தனியார் பஸ்கள்
அரசு பஸ்சில் மகளிருக்கு இலவசம்: 'ஈ அடிக்கும்' தனியார் பஸ்கள்
ADDED : ஆக 02, 2024 12:38 AM

சென்னை: அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்தால், தனியார் பஸ்களில், 40 சதவீதம் பயணியர் குறைந்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை, மதுரை, நாகர்கோவில், நீலகிரியை தவிர மற்ற இடங்களில், மொத்தம் 4,700 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், 1,500 டவுன் பஸ்கள்.
மேலும், சாதாரண கட்டண அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம். கடந்த 2021ல் துவங்கிய இந்த இலவச திட்டத்தால், அரசு பஸ்களில் பெண் பயணியர் எண்ணிக்கை, 40 சதவீதத்தில் இருந்து, 63 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால், தனியார் பஸ்களில் பெண் பயணியரின் எண்ணிக்கை, 40 சதவீதம் குறைந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனச் செயலர் தர்மராஜ் கூறியதாவது:
இரு சக்கர வாகனங்கள், கார்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், பஸ்களில் பயணியர் கூட்டம் பெரிய அளவில் இல்லை. அரசு சாதாரண கட்டண பஸ்களில், பெண்களுக்கு இலவச பயண சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளதால், தனியார் பஸ்களில், 40 சதவீதம் வரை கூட்டம் குறைந்துள்ளது. இதற்கு டூ - வீலர் உள்ளிட்ட வாகனங்கள் பெருக்கமும் ஒரு காரணம்.
முன்பெல்லாம், ஒரு பஸ்சில் அதிகபட்சமாக, தினமும் 2,300 பேர் பயணம் செய்தனர். தற்போது, 1,300 பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர். டீசல், உதிரிபொருட்கள் விலை உயர்ந்து வருவதால், எங்களால் இழப்பை சரிசெய்ய முடியாமல் கஷ்டப்படுகிறோம்.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில், தனியார் பஸ்களுக்கு கி.மீ.,க்கு 1 ரூபாய் என, கட்டணம் இருக்கிறது. தமிழகத்தில் கி.மீ.,க்கு 58 காசு மட்டுமே கட்டணம்.
பொது போக்குவரத்து வசதியைப் பாதுகாக்க, தமிழக அரசு எங்களுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.