மத்திய அரசின் நோக்கம் சரி: மாணவர்களின் துயரம்: அன்புமணி கவலை
மத்திய அரசின் நோக்கம் சரி: மாணவர்களின் துயரம்: அன்புமணி கவலை
மத்திய அரசின் நோக்கம் சரி: மாணவர்களின் துயரம்: அன்புமணி கவலை
ADDED : ஜூன் 23, 2024 12:50 PM

புதுடில்லி: 'மத்திய அரசின் நோக்கம் சரியாக இருந்தாலும் மாணவர்களின் துயரம் விவரிக்க முடியாதது' என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யுங்கள். இந்தியா முழுவதும் இன்று நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்களின் நலனையும், மனநிலையையும் சிறிதும் உணர்ந்து கொள்ளாமல் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வுகள் நடத்தப்படும் விதம் தொடர்பாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில், நீட் தேர்வு நடத்தும் முறை வலிமையாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காகவே நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் மத்திய அரசின் நோக்கம் சரியானதாக இருக்கலாம், ஆனால் இந்த முடிவால் மாணவர்கள் அனுபவித்த துயரமும், அவதியும் விவரிக்க முடியாதவை.
குறைந்தபட்சம் நீட் தேர்வை ஒத்தி வைக்கும் முடிவை 3 நாட்களுக்கு முன்னதாக எடுத்திருந்தால் கூட இந்த மன உளைச்சலை தவிர்த்திருக்கலாம். நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது முதலே அதில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் அதை போக்க முடியவில்லை. எனவே நீட் தேர்வு சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.