ஜூன் 8ல் மாஞ்சோலைக்கு செல்கிறது அனைத்து கட்சி குழு; போராட்டத்தில் ஈடுபட முடிவு
ஜூன் 8ல் மாஞ்சோலைக்கு செல்கிறது அனைத்து கட்சி குழு; போராட்டத்தில் ஈடுபட முடிவு
ஜூன் 8ல் மாஞ்சோலைக்கு செல்கிறது அனைத்து கட்சி குழு; போராட்டத்தில் ஈடுபட முடிவு
ADDED : ஜூன் 03, 2024 04:08 AM

திருநெல்வேலி : 'மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களை அகதிகளாக விடமாட்டோம். அவர்களை பாதுகாக்க முதல்வரை சந்தித்து கோரிக்கை வைப்போம்; தேவைப்பட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என, அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் உள்ளது. 'பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்' என்னும் மும்பை நிறுவனம், 1929 பிப்., முதல் 99 ஆண்டுகள் குத்தகைக்கு இதை நடத்தி வருகிறது.
வரும் 2028ல் குத்தகை முடிவுக்கு வருகிறது. அதற்கு முன், இந்த ஆண்டு எஸ்டேட்டை காலி செய்ய முடிவு செய்தனர். எனவே, ஜூன் 14க்குள் விருப்ப ஓய்வு திட்டத்தில் தொழிலாளர்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.
எஸ்டேட் நிர்வாகம் அறிவித்துள்ள கருணைத்தொகை போன்றவை போதாது. வெளியூர்களுக்கு சென்றால் வாழ்விடம் இல்லை. எனவே, தங்களுக்கு போதுமான திட்டங்களை ஏற்படுத்த வேண்டும். அரசு எங்களுக்கு அம்பாசமுத்திரம் அருகே பாப்பான்குளத்தில் ஏற்கனவே வழங்கிய நிலப்பட்டாக்களின்படி நிலத்தை ஒப்படைக்க வேண்டும். அரசே டான் டீ தொழிற்சாலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆலோசிக்க, திருநெல்வேலியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. தி.மு.க., மாவட்ட செயலர் ஆவுடையப்பன், டி.பி.எம்.மைதீன்கான், அ.தி.மு.க., மாவட்ட செயலர் தச்சை கணேஷராஜா, பா.ஜ., மாவட்ட தலைவர் தயாசங்கர், எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க., அப்துல் வகாப், ம.தி.மு.க., சதன் திருமலை குமார், ம.தி.மு.க., வக்கீல் அமலராஜ் உட்பட அனைத்து கட்சியினர் பங்கேற்றனர்.
ஜூன் 7ல் பிரச்னை குறித்து கலெக்டரை சந்தித்து முறையிடுவது, ஜூன் 8ல் மாஞ்சோலை சென்று மக்களின் கருத்துகளைக் கேட்டு முடிவெடுப்பது என முடிவு செய்தனர். தற்போது தொழிலாளர்களிடம் கட்டாயமாக கையெழுத்து பெறுவதை நிறுத்தவும் கோரிக்கை விடுத்தனர்.
தி.மு.க., மாவட்ட செயலர் ஆவுடையப்பன் கூறுகையில், ''மாஞ்சோலையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் நான்கு தலைமுறைகளாக பணியாற்றி வருகின்றனர். 2006 வன சட்டப்படி அவர்களை வெளியேற்ற முடியாது. தற்போது அவர்களை அகதிகளாக விட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இது குறித்து முதல்வரை சந்தித்து கோரிக்கை வைப்போம். தொடர்ந்து தமிழக அரசு டான் டீ நிறுவனம் ஏற்று நடத்தவும் கோரிக்கை வைப்போம்,'' என்றார்.