'நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியது எவராக இருந்தாலும் நடவடிக்கை'
'நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியது எவராக இருந்தாலும் நடவடிக்கை'
'நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியது எவராக இருந்தாலும் நடவடிக்கை'
ADDED : ஜூலை 03, 2024 01:25 AM
சென்னை:'வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டி, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எதற்கும் அஞ்சாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் தாக்கல் செய்த மனு:
அரசு வாகனங்கள் தவிர, இரண்டு மற்றும் நான்கு சக்கர தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்களில், 'போலீஸ், அரசு, ஊடகம், வழக்கறிஞர், டாக்டர்' என, ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது; மீறினால் அபராதம் விதிக்கப்படும்' என, ஏப்ரல், 27ல் சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்தனர்.
இந்த உத்தரவு, சென்னை மாநகருக்கு மட்டுமா அல்லது மாநிலம் முழுதும் பொருந்துமா என்பது குறித்து, அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடவில்லை. மாநிலம் முழுதும் இந்த நடவடிக்கையை அமல்படுத்த வேண்டும்.
உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, விதிமீறலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு அளித்த மனுவை பரிசீலிக்கும்படி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆகியோர் ஆஜராகி, மாநில போக்குவரத்து கமிஷனர் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் சார்பில், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகரின் அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில், கூறப்பட்டுள்ளதாவது:
வாகனங்களில் தடை செய்யப்பட்ட, 'சன் கன்ட்ரோல் பிலிம்' என்ற கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தடுக்கவும் கண்காணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி, கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் நபர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தனியார் வாகனங்களில், மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை ஒட்டும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
போக்குவரத்து விதிகள் குறித்து, பொதுமக்கள், பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. கடந்த மே மாதம் வரை, சென்னை மாநகரில் வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் மீது, 6,279 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக, 31.39 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல்கள், நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது தொடர்பாக, 51,414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2.57 கோடி ரூபாய் அபராதம் போடப்பட்டுள்ளது. இவற்றில், 17,818 வழக்குகளில் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகள் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு, உடனே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வாகனங்களில் நம்பர் பிளேட் உள்ளிட்ட இடங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு எதிராகவும், போலீசார் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதைப்பதிவு செய்த நீதிபதிகள், சட்ட விரோத மாக வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்களை ஒட்டுபவர்கள் யாராக இருந்தாலும், எதற்கும் அஞ்சாமல் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு உத்தரவை அமல்படுத்தி, இரு வாரங்களில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.