விரைவில் மாணவருக்கு ரூ.1000; போதையையும் கட்டுப்படுத்தணும்: கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
விரைவில் மாணவருக்கு ரூ.1000; போதையையும் கட்டுப்படுத்தணும்: கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
விரைவில் மாணவருக்கு ரூ.1000; போதையையும் கட்டுப்படுத்தணும்: கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
UPDATED : ஜூன் 12, 2024 04:28 PM
ADDED : ஜூன் 12, 2024 06:38 AM

சென்னை : “தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதற்காக பெரும் இயக்கத்தை துவக்க இருக்கிறோம். வருவாய் துறையில் பொதுமக்கள் சான்றிதழ் பெறுவதில் உள்ள பிரச்னைகளை களைவதில், கலெக்டர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், கலெக்டர்கள் ஆய்வுக் கூட்டம், நேற்று துவங்கியது. முதல் நாளில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 14 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
கோடைக் காலத்தில், குடிநீர் பிரச்னை, மின்வெட்டு ஏற்படாமல் செயல்பட்டதற்கு நன்றி. அடுத்து வரும் நாட்களில், இன்னும் பல திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளோம். புதுமைப்பெண் திட்டம் போல், மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும், 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் துவக்கப்பட உள்ளது.
வரும் இரண்டு ஆண்டுகள், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும், மிக முக்கியமான ஆண்டுகள். புதிய உத்வேகத்துடன், மக்கள் நலப்பணிகளை மிக சிறப்பாக செய்ய வேண்டும்.
மக்களுடன் முதல்வர் திட்டம், அடுத்த மாதம் 15ம் தேதி முதல், செப்., 15 வரை, ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. 'உங்களைத் தேடி உங்கள் ஊரில், நீங்கள் நலமா' போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
வருவாய் துறையில், பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுவதில், பொதுமக்கள் அடையும் சிரமங்கள் உள்ளிட்ட பிரச்னைகள், அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. கலெக்டர்கள் அனைவரும் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். 'கலைஞர் கனவு இல்லம்' திட்டம், 2.50 லட்சம் தொகுப்பு வீடுகளை புனரமைக்கும் திட்டம் ஆகியவற்றில், தனிக்கவனம் செலுத்துங்கள்.
அனைத்து பள்ளிக் குழந்தைகளும், கல்லுாரியில் சேர்ந்து படிக்கும் வகையில், 'கல்லுாரி கனவு, உயர்வுக்கு படி' போன்ற திட்டங்களை, ஆர்வத்துடன், முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். மழைக் காலங்களில், இயற்கை இடர்பாடுகள் காரணமாக பணிகள் தாமதப்படக்கூடும் என்பதால், மாவட்டங்களில் நடந்து வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை, பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கிறோம். அது போதாது. போதைப் பொருள் நடமாட்டம் என்பது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை மட்டுமல்ல; சமூக ஒழுங்கு பிரச்னை. எனவே, தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க பெரும் இயக்கத்தை துவக்க உள்ளோம்.
கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து, போதைப் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க, அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். போதைப் பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில், தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
போதைப் பொருட்கள் நடமாட்டம் அறவே இல்லை; முற்றுப்புள்ளி வைத்து விட்டோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும். மக்கள் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும். இவ்வாறு, முதல்வர் பேசினார்.
கூட்டத்தில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு திட்டங்கள் செயல்பாடு எந்த வகையில் உள்ளது என, ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.