/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ செயல்படுகிறதா பள்ளிகளில் ஒழுக்க கமிட்டிகள்: முழுவீச்சில் கூட்டங்கள், ஆய்வுகள் நடத்துவது அவசியம் செயல்படுகிறதா பள்ளிகளில் ஒழுக்க கமிட்டிகள்: முழுவீச்சில் கூட்டங்கள், ஆய்வுகள் நடத்துவது அவசியம்
செயல்படுகிறதா பள்ளிகளில் ஒழுக்க கமிட்டிகள்: முழுவீச்சில் கூட்டங்கள், ஆய்வுகள் நடத்துவது அவசியம்
செயல்படுகிறதா பள்ளிகளில் ஒழுக்க கமிட்டிகள்: முழுவீச்சில் கூட்டங்கள், ஆய்வுகள் நடத்துவது அவசியம்
செயல்படுகிறதா பள்ளிகளில் ஒழுக்க கமிட்டிகள்: முழுவீச்சில் கூட்டங்கள், ஆய்வுகள் நடத்துவது அவசியம்
UPDATED : ஜூலை 11, 2024 07:16 AM
ADDED : ஜூலை 11, 2024 04:38 AM

விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஒரு பள்ளியில் புகுந்து ஆசிரியரை, இரு மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவத்தை தொடர்ந்து பள்ளிகளில் ஒழுக்க கமிட்டிகளை ஏற்படுத்த சி.இ.ஓ., வளர்மதி உத்தரவிட்டிருந்தார். இக்கமிட்டிகள் முழுவீச்சில் செயல்படுகிறதா என்பதை கண்காணித்து, கூட்டங்கள், ஆய்வு செய்து மாணவர்களின் எதிர்கால நலனை பாதுகாப்பது அவசியமாகிறது.
மாவட்டத்தில் 2023 டிச.ல் ஒரு அரசு பள்ளியில் மாணவரை கண்டித்ததற்காக ஆசிரியரை சக மாணவருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தால் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்து ஒழுக்க கமிட்டிகளை தொடர்ந்து ஏற்படுத்த அறிவுறுத்தி ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வந்தனர். இதை தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி ஒழுக்க கமிட்டிகளை அமைக்க உத்தரவிட்டார்.
ஏற்கனவே அமைத்த பள்ளிகளில் அதை பலப்படுத்தவும், அமைக்காத பள்ளிகளில் அதை அமைத்து மாணவர்களை நல்வழிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் மாவட்ட எஸ்.பி., மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பி.டி.எப்.,ஐ அரசு பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகம் மூலமாக, அரசு உதவிபெறும் பள்ளிகளில் கணினி ஆய்வகம் மூலமாக மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதற்கு பின் அனைத்து பள்ளிகளும் ஒழுக்க கமிட்டிகளை அமைத்தன. அதற்கு பின் ஜனவரி மாதம் வரவே அதற்கு பின் செய்முறை தேர்வு, பொதுத்தேர்வு என மாணவர்கள் அடுத்த படிப்புக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் பள்ளிகள் துவங்கிய நிலையில் ஒழுக்க கமிட்டிகளின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என ஆராய்வது அவசியமாகி உள்ளது. 2023-24 பொதுத்தேர்வில் 10ம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளி ஆண் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.51, பிளஸ் 2 தேர்வில் 89.39 சதவீதமாகவும் உள்ளது. தேர்ச்சி அடையாத மாணவர்களின் அடுத்தகட்ட உயர்கல்வி வாய்ப்பு குறைகிறது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1, 2 வகுப்புகளில் மாணவர்களின் நன்னடத்தை, அவர்களது புற சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டியது பள்ளிக்கல்வித்துறை கடமை.
மாணவர்கள் சமூக வலைத்தள ரீல்ஸ்களில் பள்ளி சீருடையில் வீடியோ வெளியிடுவது, ஜாதி தொடர்பாக பேசுவது சிக்கலான பிரச்னையாக மாறி உள்ளது. ஒழுக்க கமிட்டிகளை பலப்படுத்தி இதை தடுக்க வேண்டும். இல்லையெனில் இது அவர்களது எதிர்காலத்தை பாதிக்கும். ஒழுக்க கமிட்டிகளுக்கென தனியான வழிகாட்டு நெறிமுறை அமைத்து அவற்றை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்.