Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/குறைகேட்புக் கூட்டத்தில் பி.டி.ஓ.,க்கள்... ஆப்சென்ட்; விவசாயிகள் ஆதங்கம்: ஆர்.டி.ஓ., சமாதானம்

குறைகேட்புக் கூட்டத்தில் பி.டி.ஓ.,க்கள்... ஆப்சென்ட்; விவசாயிகள் ஆதங்கம்: ஆர்.டி.ஓ., சமாதானம்

குறைகேட்புக் கூட்டத்தில் பி.டி.ஓ.,க்கள்... ஆப்சென்ட்; விவசாயிகள் ஆதங்கம்: ஆர்.டி.ஓ., சமாதானம்

குறைகேட்புக் கூட்டத்தில் பி.டி.ஓ.,க்கள்... ஆப்சென்ட்; விவசாயிகள் ஆதங்கம்: ஆர்.டி.ஓ., சமாதானம்

ADDED : மார் 28, 2025 05:07 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் புகார்களை விசாரித்து தீர்வு காணும் துறை அதிகாரிகள் வராததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.

கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நேற்று விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் கனிமொழி, யுவராஜ், நாராயணமூர்த்தி, செந்தில்குமார், முத்து முன்னிலை வகித்தனர். ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் வேல்முருகன் உட்பட விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விவசாயிகள் புகார் மற்றும் குறைகள் தெரிவித்து பேசியதாவது:

பெரும்பாலான கிராமங்களில் விவசாய நிலங்களில் பட்டா எண்கள்மாற்றி வழங்கப்பட்டுள்ளது. நிலம் வைத்துள்ள உரிய விவசாயிகளுக்கு அந்த பட்டா சேராமல் உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து, அதில் திருத்தம் செய்து உரியவரிடம் பட்டாவை வழங்க வேண்டும்.

கண்டம்பாக்கம் ஏரியில் மீன் குத்தகைக்கு எடுத்தவர்கள், தண்ணீரை திறப்பதால், 20க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்களில் தண்ணீர் வந்து மூழ்கியுள்ளது. இதனால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மூழ்கியுள்ளது.

இதை அதிகாரிகள் ஆய்வு செய்து, மூழ்கிய நெற்பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

ஏரிகளில் மீன் குஞ்சுகள் வளர்த்து குத்தகை விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். வி.சாலையில் உள்ள அரசு நிலத்தை தனியார் குளிர்பானம் தொழிற்சாலை நிர்வாகம் ஆக்கிரமித்து நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றனர்.

ஏரிகளில் தண்ணீர் இருந்தாலும், அந்த நீர் பாசன வாய்க்கால் வழியாக சென்றதால்தான் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும். இந்த பாசன வாய்க்காலை பலர் ஆக்கிரமித்துள்ளனர்.

இதையெல்லாம் அதிகாரிகள் கண்டறிந்து ஆக்கிரமிப்பில் உள்ள ஏரி, பாசன வாய்க்கால் இடங்களை மீட்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

நாங்கள் விவசாயம் சார்ந்த புகார்களை தெரிவித்தாலும், அதை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பி.டி.ஓ.,க்கள், துறை சார்ந்த அதிகாரிகள் இங்கு வருவதில்லை. இப்படி இருந்தால் பிரச்னைகள் எப்படி தெரிந்து நடவடிக்கை எடுக்க முடியும். அரசு கணக்கிற்காக பெயரளவில் தான் இந்த கூட்டம் நடக்கிறது.

இதை கேட்ட ஆர்.டி.ஓ., அடுத்த கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கண்டிப்பாக பங்கேற்பார்கள் என விவசாயிகளை சமாதானம் செய்தார். தொடர்ந்து, விவசாயிகள் கூறிய பிரச்னைகள் அனைத்தும் உரிய முறையில் விசாரணை செய்து, தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us