ADDED : செப் 21, 2025 11:04 PM
விழுப்புரம்: திண்டிவனத்தில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, நாளை மறுதினம் நடக்க உள்ளதாக, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் உயிர்ம வேளாண்மை முறையில் பல பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். நச்சுப்பொருட்கள் கலப்பில்லாத உணவுப்பொருட்களை உறுதிப்படுத்துவதற்கு உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
இந்த நோக்கத்தோடு, உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வரும் 24ம் தேதி, நாளை மறுதினம் நடக்கிறது.
திண்டிவனம், ஸ்ரீ சங்கமித்ரா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள கண்காட்சியில், வேளாண்மைத் துறை சார்பில் அரங்குகள் அமைத்து இயற்கை இடுபொருட்கள் மற்றும் பாரம்பரிய பயிர் ரகங்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
மேலும், உயிர்ம வேளாண் உற்பத்தி பொருட்களை லாபம் ஈட்டி, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதற்கான உத்திகள், உயிர்ம வேளாண்மையின் முக்கியத்துவம், மண்வளம், பயிர் பாதுகாப்பு, உயிர்ம சான்று பெறும் வழிமுறைகள் மற்றும் ஏற்றுமதிக்கு சந்தை வாய்ப்பு, விவசாயிகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.