/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ முசிறி அரசு கல்லுாரியில் மாணவர்கள் மீது தாக்குதல் முசிறி அரசு கல்லுாரியில் மாணவர்கள் மீது தாக்குதல்
முசிறி அரசு கல்லுாரியில் மாணவர்கள் மீது தாக்குதல்
முசிறி அரசு கல்லுாரியில் மாணவர்கள் மீது தாக்குதல்
முசிறி அரசு கல்லுாரியில் மாணவர்கள் மீது தாக்குதல்
ADDED : ஜூலை 09, 2024 09:22 PM
திருச்சி:முசிறி, அரசு கலைக் கல்லுாரியில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, ஒரு மாணவனின் உறவினர்கள் கல்லுாரிக்குள் புகுந்து, மாணவர்களை -கட்டைகளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் முசிறி, துறையூர், தா.பேட்டை, தொட்டியம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
நேற்று கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் ஒரு மாணவனுக்கும் மூன்றாம் ஆண்டு படித்து வரும் ஒரு மாணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதில் ஒரு மாணவன், தகராறு குறித்து போன் மூலம் தனது அண்ணனுக்கு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அந்த மாணவனின் சகோதரன் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்துக் கொண்டு கல்லுாரி வளாகத்திற்குள் நுழைந்து எதிர் தரப்பு மாணவனையும், அவரது நண்பர்களையும் கட்டைகளால் அடித்து, உதைத்துள்ளனர்.
இதில், இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள், முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த முசிறி போலீசார், முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரசு கல்லுாரி வளாகத்தில், மாணவர்களை கட்டைகளால் தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.