ADDED : ஜூன் 03, 2024 01:03 AM
திருப்பூர்;பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பழைய பாஸ், பள்ளி அடையாள அட்டை பயன்படுத்தி, அரசு பஸ்களில் மாணவர்கள் இலவசமாக பயணித்துக் கொள்ளலாம். மாணவர்களிடம் நடத்துனர்கள் டிக்கெட் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. 'பள்ளிகள் திறந்த பின்பும், மாணவர் அட்மிஷன் தொடரும். 'எமிஸ்' தளத்தில் மாணவ, மாணவியரின் விபரங்களை முழுமையாக பொறுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர் சரிபார்த்து வழங்கிய பின்பே, பஸ் பாஸ் முதல்கட்ட பணிகளை துவங்க முடியும்.
ஆவணங்களை சரிபார்த்து, ஸ்மார்ட் கார்டாக தயாரிக்க நிச்சயம், 15 முதல், 20 நாட்களுக்கு மேலாகும். நடப்பாண்டும் அரசு பள்ளிகளில் இணையும் மாணவர் எண்ணிக்கை அதிகமாகும்; ஜூன் 30க்குள் பஸ் பாஸ் பணி முழுமையாக முடிக்கப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கு வழங்க வாய்ப்புகள் குறைவு'' என்கின்றனர், போக்கு வரத்து கழக அதிகாரிகள்.