Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அமராவதியிலிருந்து 5வது நாளாக  உபரி நீர் திறப்பு புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கும் வழங்கல்

அமராவதியிலிருந்து 5வது நாளாக  உபரி நீர் திறப்பு புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கும் வழங்கல்

அமராவதியிலிருந்து 5வது நாளாக  உபரி நீர் திறப்பு புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கும் வழங்கல்

அமராவதியிலிருந்து 5வது நாளாக  உபரி நீர் திறப்பு புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கும் வழங்கல்

ADDED : ஜூலை 24, 2024 01:48 AM


Google News
Latest Tamil News
உடுமலை;உடுமலை அமராவதி அணை நிரம்பி, ஐந்து நாட்களாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 25,250 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில், பிரதான கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ள, அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, கடந்த, 18ம் தேதி அணை நிரம்பியது.

இதனையடுத்து, இரு மாவட்டத்திலும், ஆற்றின் வழியோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அணையிலிருந்து ஆற்று மதகு வழியாக, கடந்த, 5 நாட்களாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வரும் நிலையில், பிரதான கால்வாயில், 5 மாதமாக நீர் திறக்கப்படாத நிலையில், கடும் வறட்சி நிலவி வருகிறது.

எனவே, தென்னை, கரும்பு உள்ளிட்ட நிலைப்பயிர்களை காப்பாற்ற உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும், என புதிய ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், கால்வாய் பராமரிப்பு பணிகள் நடந்து வந்ததால், நீர் திறப்பதில் சிக்கல் நீடித்தது.

இந்நிலையில், பராமரிப்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நேற்றுமுன்தினம் முதல் அணையிலிருந்து பிரதான கால்வாயில் உபரி நீர் திறக்கப்பட்டது.

அதிகாரிகள் கூறுகையில், 'அமராவதி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில், கால்வாயில், வினாடிக்கு, 440 கனஅடி நீரும், மீதம் உள்ள உபரி நீர் ஆற்று மதகு வழியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது,' என்றனர்.

அணை நீர்மட்டம்


அமராவதி அணையில் நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 90 அடியில், 89.11 அடி நீர்மட்டமும், மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3,966.32 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,444 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து, 1,392 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us