Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இயற்கை ஆர்வம் மேலோங்க பசுமை திருமணங்கள்

இயற்கை ஆர்வம் மேலோங்க பசுமை திருமணங்கள்

இயற்கை ஆர்வம் மேலோங்க பசுமை திருமணங்கள்

இயற்கை ஆர்வம் மேலோங்க பசுமை திருமணங்கள்

ADDED : ஜூன் 22, 2024 04:47 PM


Google News
Latest Tamil News
திருமணம் என்றாலே ஆடம்பரம் என்பதை தவிர்த்து எளிமையை நோக்கி நகரும் காலமும் கனிகிறது. பாலிதீன் தொடர்பான பொருட்களை அறவே தவிர்ப்பது, மணமக்களை வாழ்த்த வருவோருக்கு மரக்கன்று, புத்தகம் வழங்குவது போன்ற பழக்கங்களை, பலரும் வழக்கத்திற்கு கொண்டு வரத்துவங்கியிருக்கின்றனர். இவை 'பசுமைத்திருமணங்கள்' என அழைக்கப்படுகின்றன.

குவியும் குப்பைகள்


சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவம் கூறியதாவது:

திருப்பூர் போன்ற நகரங்களில், திருமணத்துக்காக பல லட்சக்கணக்கான ரூபாய் பணம் செலவழிக்கின்றனர். குடும்பங்களுக்கு இடையே, ஒரு போட்டி சூழலை கூட ஏற்படுத்தியிருக்கிறது.திருமணங்களில் பலவகை உணவுகளை வழங்குகின்றனர். பெருமளவில் உணவுக்கழிவு, பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் வெளியேறுகின்றன. திருமணம் அதிகம் நடைபெறும் முகூர்த்த நாட்களில், மிக அதிகளவு குப்பை சேர்கிறது என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது. தண்ணீர், ஐஸ்கிரீம், புரூட் சாலட் போன்றவை பிளாஸ்டிக் டம்ளர், தட்டுகளில் தான் வழங்கப்படுகின்றன.

குறைவான பயன்பாடு


பசுமை திருமணங்களில், பாலிதீன் அறவே தவிர்க்கப்பட்டு, மக்கும் தன்மையுடைய பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறு, வெளியேறும் பொருட்களை கூட தனியாக சேகரித்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அகற்ற தன்னார்வ அமைப்பினரை பணியில் ஈடுபடுத்துகின்றனர்; இது, வரவேற்கத்தக்கது.

வீணடிக்கப்படும் உணவு


பசுமை திருமணங்களின் முக்கிய நோக்கம், வளங்களை குறைவாக பயன்படுத்த வேண்டும் என்பதே. அதாவது, தேவைக்கு அதிகமாக உணவு பரிமாறி, அவை வீணடிக்கப்படுவதை தவிர்ப்பது; மிக அதிகளவு நபர்களை அழைத்து, பெரும் செலவு செய்வதை குறைப்பதும் கூட, வளங்களின் வரிசையில் வரும். உதாரணாக, இலையில் போடப்படும் உணவு அளவுக்கதிகமாகும் போது, அதை அப்படியே மூடி வைத்து, வீணடிக்கும் நிகழ்வை பல இடங்களில் பார்த்திருக்க முடியும். அவ்வாறு நாம் வீணடிக்கும் உணவு, அடுத்தவருக்குரியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்; அடுத்தவருக்குரிய உணவை அபகரிப்பதற்கு, இது சமம்.

திருமணங்களுக்கு செலவிடும் ஆடம்பர செலவை, அரசு மருத்துவமனை, பள்ளிகளின் மேம்பாட்டுக்கு வழங்குவதும்; எளிமையை கடைபிடிப்பதும் கூட வளங்களை பாதுகாப்பதாக அமையும்.பசுமை திருமணங்களில் இயற்கை ஆர்வலர்களை வைத்து, கருத்தரங்கு நடத்துவதும் வரவேற்க்கத்தக்கது. இதன் வாயிலாக, திருமணங்களுக்கு வந்து செல்வோர், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பெற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.---





      Our Apps Available On




      Dinamalar

      Follow us