Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தென்னையை தாக்கும் கருந்தலை புழுக்கள்

தென்னையை தாக்கும் கருந்தலை புழுக்கள்

தென்னையை தாக்கும் கருந்தலை புழுக்கள்

தென்னையை தாக்கும் கருந்தலை புழுக்கள்

ADDED : ஜூலை 17, 2024 08:38 PM


Google News
உடுமலை : தென்னையை தாக்கும் கருந்தலை புழுக்களை கட்டுப்படுத்தும் முறை குறித்து, கோவை வேளாண் பல்கலை., விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

அதன்படி, தென்னை மரங்களை தாக்கும் கருந்தலை புழுக்கள் இலைகளின் அடிப்பாகத்தில் உள்ள பச்சையத்தை சுரண்டி விடும். இதனால், ஒளிச்சேர்க்கை திறன் குறைந்து, 40 சதவீதம் வரை மகசூல் இழப்பீட்டுக்கு காரணமாக உள்ளது.

தீவிர பாதிப்புக்கு உள்ளான மரங்கள் தீயினால் கருகியது போல காணப்படும். கீழ் அடுக்கிலுள்ள இலைகள் காய்ந்து பழுப்பு நிறமாகவும், நடுப்பகுதி பச்சையாகவும், காய்ந்தும் காணப்படும். மேல் அடுக்கு உச்சி பகுதியில் உள்ள ஓலைகள் மட்டும் பச்சையாக இருக்கும்.

கருந்தலை புழுக்களால் மிகவும் பாதிக்கப்பட்ட அடிமட்ட இலைகளை வெட்டி தீயிட்டு எரிக்க வேண்டும்; இதனால், தாக்கப்பட்ட இலைகளில் உள்ள முட்டைகள், புழுக்கள், கூட்டுப்புழுக்கள் அழிக்கப்பட்டு, சேதம் குறையும்.

தாக்குதலுக்கு உள்ளான இலைகளின் அடிப்பாகங்களில் உள்ள நுாலாம்படைகளின் மீது அசாட்டிராக்டின் 5 மில்லி; 1 மில்லி ஒட்டு திரவத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

அல்லது பரிந்துரைப்படி, வேர் வழியாக மருந்து செலுத்தலாம். இரவு 7:00 மணி முதல் 11 மணி வரையில், ஏக்கருக்கு இரண்டு விளக்கு பொறிகளை வைத்து தாய் அந்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்தும், கவர்ந்தும் அழிக்கலாம்; அல்லது பிரக்கான் ஒட்டுண்ணிகளை 21 நாட்கள் இடைவெளியில் 3 முதல் 4 முறை விட வேண்டும்.

இவ்வாறு, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us