ADDED : ஜன 05, 2024 04:36 AM

திருப்புவனம் ; திருப்புவனத்தில் ஒரு முருங்கைக்காய் விலை 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்புவனம் காய்கறி மார்க்கெட்டில் 20க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைத்து காய்கறிகள் விற்பனை செய்கின்றனர்.
மதுரை காய்கறி மார்க்கெட்டில் இருந்து மொத்தமாக காய்கறிகள் வாங்கி வந்து திருப்புவனத்தில் விற்பனை செய்கின்றனர்.
பொதுவாக கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் காய்கறிகளின் விலை உச்சத்தில் இருக்கும்.
ஆனால் இந்தாண்டு ஒருசில காய்கறிகளை தவிர்த்து மற்ற காய்கறிகளின் விலை உயரவில்லை. தக்காளி கிலோ ரூ.30 கத்தரிக்காய் 40, அவரை, கேரட், பீட்ரூட் உள்ளிட்டவை 50, பீன்ஸ் 60க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பெரும்பாலான கடைகளில் முருங்கைக்காய் கிடைக்கவே இல்லை. ஒரு முருங்கைக்காய் சிறிய ரகம் பத்து ரூபாய் என்றும் சற்று பெரிய ரகம் 15 முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
வியாபாரி ராஜா கூறுகையில்: தமிழகத்தில் தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் முருங்கைக்காய் விளைவிக்கப்படுகிறது.
கடும் பனி காரணமாக விளைச்சல் பாதித்துள்ளதால் வடமாநிலங்களில் இருந்து முருங்கைக்காய் மதுரை மார்க்கெட்டிற்கு வருகிறது.
எனவே விலை உயர்ந்துள்ளது. இனி உள்ளுர் காய்கள் விற்பனைக்கு வந்தால் மட்டுமே விலை குறையும், மார்ச் வரை விலை குறைய வாய்ப்பில்லை, என்றார்.