ADDED : ஜூன் 04, 2024 05:35 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டி இடிக்கப்படும் கழிப்பறைகளால் அரசு நிதி வீணாவதுடன் மாணவர்களுக்கு பயனில்லாமலும் போகிறது.
800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் கழிப்பறை கட்டுவதும் பிறகு அதை இடித்துவிட்டு மீண்டும் கட்டுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
மத்திய, மாநில அரசு மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற் போல் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நிதியை ஒதுக்குகிறது. ஆனால் சிறிய தொகைகளாக பிரித்து அனுப்புவதால் குறைந்த மாணவர்கள் பயன்படுத்தும் அளவில் சிறிய கழிப்பறை கட்டப்படுகிறது.
ஒப்பந்ததாரர்கள் தரம் குறைவாக கட்டிவிடுவதால் ஓரிரு ஆண்டு கூட தாக்குப் பிடிக்காமல் மழையில் இடிந்து விடுகிறது. கல்வித்துறையை பொறுத்தவரை இப்பள்ளிக்கு 10க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் உள்ளதாக ஆவணங்களில் இருந்து வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் வெவ்வேறு நிதி ஒதுக்கீட்டில் பல வடிவங்களில் கட்டப்பட்ட கழிப்பறை சில தவிர மற்றவை பயன்பாடில்லாமல் காணப்படுகிறது. தற்போது மீண்டும் பள்ளியில் கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கீடு வரப்பட்டு பழைய கழிப்பறை இடிக்கப்பட்டு வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் சிங்கம்புணரி மட்டுமன்றி அனைத்துப் பள்ளிகளிலும் இதுவரை கட்டப்பட்ட கழிப்பறைகள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை ஆகியவற்றை ஆய்வு செய்து சிறந்த முறையில் தரமான கழிப்பறைகளை கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.