ADDED : ஜூன் 08, 2024 02:50 AM
சூறாவளி காற்றுடன் மழை
மரக்கிளை முறிந்து விழுந்தது
கெங்கவல்லி: தம்மம்பட்டியில், சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் சாலையோர மரத்தின் கிளை முறிந்து விழுந்தது.
கெங்கவல்லி அருகே, தம்மம்பட்டி, உடையார்பாளையம், நாகியம்பட்டி, செந்தாரப்பட்டி பகுதியில் நேற்று மாலை, 5:00 மணியளவில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில், உடையார்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் சாலையோரம் இருந்த மரத்தின் கிளை முறிந்து, சாலையில் விழுந்தது. இதனால், அவ்வழிப்பாதையில் சிறிது நேரம் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
அப்பகுதி மக்கள், மரக்கிளையை அகற்றிய பின், வாகன ஓட்டிகள் சென்றனர்.
சிறையிலிருந்து வந்த ரவுடி சாவு
அதிக மது குடித்ததால் பரிதாபம்
சேலம்: சிறையிலிருந்து வந்த ரவுடி, அதிக மது குடித்ததால், உடல் நலம் பாதித்து உயிரிழந்தார்.
சேலம் செவ்வாய்பேட்டை, ஆற்றோரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் லோகேஸ்வரன், 33, ரவுடியான இவர் மீது, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
நேற்று முன்தினம் மாலை, சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்த லோகேஸ்வரன், மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு சென்றும் மது அருந்தியுள்ளார். இரவு உடல்நிலை மோசமானதால், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர்.
மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. செவ்வாய்பேட்டை போலீசார், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாகனம் மோதி பெண் பலிஏத்தாப்பூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் வனபுரத்தை சேர்ந்தவர் அருணாச்சலம், 65. இவரது முதல் மனைவி சிவகங்கை, 57. இருவரும் ஏத்தாப்பூர் அடுத்த தும்பல் பகுதியில் உள்ள மகள் சங்கீதா வீட்டிற்கு கோவில் திருவிழாவை காண வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை, 5:30 மணியளவில், சிவகங்கை கோவில் விழாவிற்கு சென்றுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.