Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பத்திரப்பதிவு அலுவலகத்தில் அரசின் உத்தரவு கண்துடைப்பு! இடைத்தரகர்கள் தடையின்றி நடமாட்டம்

பத்திரப்பதிவு அலுவலகத்தில் அரசின் உத்தரவு கண்துடைப்பு! இடைத்தரகர்கள் தடையின்றி நடமாட்டம்

பத்திரப்பதிவு அலுவலகத்தில் அரசின் உத்தரவு கண்துடைப்பு! இடைத்தரகர்கள் தடையின்றி நடமாட்டம்

பத்திரப்பதிவு அலுவலகத்தில் அரசின் உத்தரவு கண்துடைப்பு! இடைத்தரகர்கள் தடையின்றி நடமாட்டம்

ADDED : ஜன 25, 2024 12:13 AM


Google News
பெ.நா.பாளையம் : சார்-பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களை அனுமதிக்க கூடாது என்ற பதிவு துறையின் உத்தரவு கண் துடைப்பாக உள்ளது.

சார்-பதிவாளர் அலுவலகங்களில் நியாயமான, நேர்மையான, அலுவலக நடைமுறைகளை பின்பற்ற, வெளி ஆட்களை பத்திர பதிவு அலுவலகத்துக்குள் அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது. ஆனாலும், அந்த உத்தரவை யாரும் பின்பற்றுவதில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இது தொடர்பான உத்தரவு பதிவுத்துறை சார்பில், பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது, அதே உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடை


அதில், சார் பதிவாளர் அலுவலகங்களில், துறைக்கே தொடர்பு இல்லாத நபர்கள் யாரும் பணியில் ஈடுபடக் கூடாது என, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில பத்திரப்பதிவு அலுவலகங்களில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இதர வெளிநபர்கள் பதிவு அலுவலர்களால், பதிவு அலுவலகத்தில் அனுமதிக்கப்படுவதாகவும், அவர்கள் வாயிலாக லஞ்சம் பெறப்படுவதாகவும், பொது மக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதை தவிர்த்திட, பதிவு அலுவலர்களால், பதிவு அலுவலகத்தில் பணிபுரிய அனுமதிக்கப்படும் மேற்கூறிய நபர்கள், இடைத்தரகர்களாக கருதப்படுவர் எனவும், அவர்கள் இடைதரகர்களாக அறிவிக்கப்பட்டு, குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சார்-பதிவாளர் அலுவலக ஆய்வின்போது, தொடர்ந்து கண்காணிக்கவும், முரணாக பதிவு அலுவலர்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீதும், சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் மீதும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண் துடைப்பு


ஆனால், இந்த உத்தரவு வெறும் கண்துடைப்பாகவே உள்ளது என, பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில்,' இது வெறும் கண் துடைப்பு உத்தரவாக மட்டுமே உள்ளது. சில பத்திர எழுத்தர்கள், சார் பதிவாளருக்கு லஞ்சம் பெறும் ஏஜன்ட்களாக செயல்படுகின்றனர்.

லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் பத்திரப்பதிவு நடப்பதில்லை. இது உலகறிந்த உண்மை' என்றனர்.

சார் பதிவாளர் அலுவலக வட்டாரத்தினர் கூறுகையில்,' ஒவ்வொரு பத்திர பதிவின் போதும், இரண்டு சாட்சிகள் அலுவலகத்திற்குள் வர வேண்டும். கிரய தொகையை சிலர் சார் பதிவாளர் முன்னிலையில், கிரயம் வழங்கும் நபருக்கு கொடுக்க விரும்புவர். அதை எவ்வாறு தடுப்பது என, தெரியவில்லை.

இவர்களை வழிநடத்த பத்திர எழுத்தர் பதிவு அலுவலகத்துக்குள் இருப்பார். இதனால், ஒரு பத்திரப்பதிவின் போது, குறைந்தபட்சம் ஆறு நபர்கள் சேர்ந்து விடுகின்றனர்.

இருந்தாலும், இடைத்தரகர்கள் உள்ளிட்ட நபர்களை அலுவலகத்துக்குள் வரவிடாமல், நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றனர்.

நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்?

இது குறித்து, பத்திர எழுத்தர்கள் சிலர் கூறுகையில்,'சார் பதிவாளர் அலுவலகத்தில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை மாநிலம் முழுவதும் இணைக்கப்பட்டுள்ளன. அதன் வாயிலாக மாவட்ட பதிவாளர்கள், மாநில பதிவுத்துறை தலைவர், குறிப்பிட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பதை எளிதாக கண்டறிந்து, இடைத்தரகர்கள் உள்ளிட்ட ஏஜன்ட்கள் மீது நடவடிக்கைகளை எடுக்க முடியும். ஆனால், நடவடிக்கை எடுக்க ஏனோ தயங்குகின்றனர்' என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us